Sunday, April 10, 2011

அந்தத் தலைவரைப் பின்பற்றத்தான் வேண்டுமா...? பகுதி : 2

பகுதி : 2

அந்தத் தலைவரைப் பின்பற்றத்தான் வேண்டுமா...?

ஆலு இம்ரான் என்ற மூன்றாவது அத்தியாயத்தின் 31 வசனத்தின் விளக்கத்தை முன் தொடரில் ஒரளவு கண்டோம்;. இறை நேசம் என்ற ஆன்மீகத் தேட்டத்தின் வழிகாட்டல் முஹம்மத் (ஸல்) அவர்களிடமே இருக்கின்றது என்பதை அந்த வசனத்தின் வழியாக இறைவன் சொல்லியுள்ளான் என்பதை உதாரணங்களுடன் விளக்கினோம். அதன் தொடர்சியை இப்போது பார்ப்போம்.

'(மனிதர்களே) நீங்கள் இறைவனை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள் என்று நபியே நீர் கூறுவீராக'..

ஆன்மீகம் என்பதே இறைவனை நேசிப்பதற்குரிய - அவனை அடைவதற்குரிய வழியாகும் என்பதில் எந்த ஆத்திகரும் மாற்று கருத்துக் கொள்ள மாட்டார். அவர்களில் பெரும்பான்மையோர் ஒரு விஷயம் குறித்து எப்போதும் சிந்திப்பதே இல்லை என்பதை நாம் இங்கு சுட்டிக் காட்டித்தான் ஆக வேண்டும்.

இவர்கள் 'நாங்கள் இறைவனை நேசிக்கிறோம்' என்ற பெயரில் ஏராளமான சடங்குகள் - சம்பர்தாயங்கள் - வணக்கத்தளங்கள் - வணக்க வழிபாடுகள் - யாத்திரைகள் - செலவுகள் என்று  குதூகல ஆர்பாட்டங்கள் செய்துக் கொண்டிருக்கிறார்களே தவிர 'நாம் இறைவனை நேசிக்கின்றோமே... இறைவன் நம்மை நேசிக்கின்றான... என்ற எதிர்மறையான - அலட்சியப்படுத்தவே முடியாத - அலட்சியப்படுத்தக் கூடாத - கேள்வியை தங்களுக்குள் என்றைக்கும் இவர்கள் கேட்டுக் கொள்வதே இல்லை.

மனம்போன போக்கிலோ - மத குருக்களின் போக்கிலோ கண்மூடித்தனமாக போவதே ஆன்மீகம், இறை நேசம் என்று இவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மனம் போன போக்கில் நடந்தால் இறைவனை அடைந்துக் கொள்ள முடியும் என்ற இவர்களின் மாய சித்தாந்தம் தான் ' தெய்வம் என்றால் அது தெய்வம், சிலை என்றால் வெறும் சிலைதான்' என்றும் 'எந்த நதியாய் இருந்தால் என்ன கடலில் கலப்பதுதான் முக்கியம்' என்றும் தீர்மானமற்ற தத்துவங்களை ஆன்மீக அடையாளமாக முன் வைக்கின்றது.

இறைவன் புறத்திலிருந்து வழிகாட்டுதல் பெறாத, மனிதனாக உருவாக்கிக் கொண்ட இத்தகைய அன்மீகத் தத்துவங்களை அதை உருவாக்கியவர்களாலேயே தங்கள் வாழ்க்கைக்கு முன்னுதாரனமாக கொள்ள முடியாது. தெய்வம் என்றால் அது தெய்வம் சிலையென்றால் வெறும் சிலைதான் என்பவர்கள், அது பார்ப்பவர்களின் பார்வையை பொறுத்தது என்று விளக்கம் கூறுபவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையில் இதை பொருத்திப் பார்க்க சம்மதிப்பார்களா..  அவர்கள் வீட்டில் உள்ள பொருளை ஒருவன் எடுத்துக் கொண்டு 'இது உன் பொருள் என்றால் உன் பொருள், என் பொருள் என்றால் என்பொருள்தான்' என்கிறான். 'இது என் தத்துவத்திலிருந்து பெறப்பட்ட வழிகாட்டல் என்பதால் இது உன் பொருளா.. என் பொருளா.. என்பதை நீயே தீர்மானித்துக் கொள்' என்பார்களா..

'எல்லா நதிகளும் கடலில் கலக்கின்றன' என்று தீர்மானங்கள் இன்றி பாய்ந்தோடும் நதிகளை உதாரணமாக்குவோர் 'அனைத்து நாடுகளின் அரசியல் சாசனமும் நல்லதைதான் ஏவுகின்றன' என்று பிற நாட்டு அரசியல் சாசனத்தை நம் நாட்டில் நடைமுறைப் படுத்துவார்களா...

ஒரு கருத்தை அழகாக சொல்கின்றோமா என்பதை விட அறிவுப் பூர்வமாக சொல்கின்றோமா என்பதுதான் முக்கியம். சில அழகியல் தத்துவங்கள் மனிதனின் அறிவை உறங்க வைத்துவிடும் என்பதற்கு நாம் எழுதிய இவைகளே சான்றாகும்.

நாம் இறைவனை நேசிக்கின்றோமா என்பது எவ்வளவு முக்கியமான கேள்வியோ அதை விட முக்கியத்துவம் வாய்ந்ததாக 'இறைவன் நம்மை நேசிக்கின்றானா..' என்ற கேள்வி நம் உள்ளங்களில் பிறக்க வேண்டும். இறைவன் நம்மை நேசிக்கும் வழியை அறிந்தால் தான் நாம் அவனை நேசிக்கும் வழி இடற்பாடுகள் இல்லாமல் காணப்படும்.

இறைவன் நம்மை நேசிக்கின்றானா என்பதை நாமாக சொந்த முயற்சியில் அறிந்துக் கொள்ள முடியாது. ஏனெனில் அது உணர்வியலுக்கும் அறிவியலுக்கும் அப்பாற்பட்ட நிலையாகும்.

இறைவன் நம்மை நேசிப்பதாக இருந்தால் 'நான் இந்த வழியில் உங்களை நேசிக்கிறேன்' என்று அவன் சொல்லித்தான் ஆக வேண்டும். சொல்வதின் வழியாகத்தான் நாம் அதை அடைந்துக் கொள்ள முடியும்.

உணர்வியலுக்கும் அறிவியலுக்கும் கட்டுப்படாத அந்த மகத்தான வழியை இறைவன், நாம் விளக்கிக் கொண்டிருக்கும் இந்த வசனத்தில் தெளிவு படுத்துகிறான்.

'(மனிதர்களே!) நீங்கள் இறைவனை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள் (இதன் வழியாக) அவன் உங்களை நேசிப்பான் என்று (தூதரே) நீர் கூறும்'.

முஹ்ம்மத் என்ற அந்த இறைத்தூதரை பின்பற்றுகிறவர்கள் எவரோ அவர்களை இறைவன் நேசிப்பான் என்று இந்த வசனம் உறுதி கூறுகிறது.
அவரை பின்பற்றுவதில் அலட்சியம் கூடாது.

இது ஒரு சாதாரண உபதேசம் அல்ல. தேடலின் இலக்கு இதுதான். இறைவனை நம்பி வாழும் உலக ஆன்மீகவாதிகள் அனைவருமே இறைவனிடம் மோட்சம் பெற வேண்டும் என்பதற்காகவே ஆன்மீகவாதிகளாக இருக்கிறார்கள். அவர்கள் உள்ளங்களில் நிலைக் கொண்டிருக்கும் இறைவனைப் பற்றிய ஆனந்தமோ, அச்சமோ அவர்களை அவன் பால் இயங்க வைக்கும் உந்து சக்தியாக இருக்கின்றது. இந் நிலையில் 'இந்த வழியாகத் தான் என்னை அடைய முடியும்' என்ற வழிகாட்டல் இறைவன் புறத்திலிருந்து கிடைக்கும் போது அதை ஆன்மீகவாதிகளால் அலட்சியப்படுத்த முடியுமா..?

 மதம் கடந்த மனநிலை வேண்டும்.

''இறைவனை நேசிக்கும் நிலையில் நான் ஒரு ஹிந்து'', ''இறைவனை நேசிக்கும் நிலையில் நான் ஒரு கிறிஸ்தவன்,'' ''நான் புத்த மதத்தவனாக இருக்கும் நிலையில் இறைவனை நேசிக்கிறேன்''  முஹம்மதை பின்பற்றுவதன் வழியாகத்தான் இறைவன் எங்களை நேசிப்பான் என்றால் நாங்கள் அனைவரும் முஸ்லிம்களாக மாற வேண்டுமா..!' என்ற கேள்வி இங்கு பிறக்கத்தான் செய்யும்.

சில அடிப்படைகள் மீது தெளிவின்மையின் காரணமாகவே இந்த கேள்வி பிறக்கின்றன.

இறைவன் முஸ்லிம்களுக்கு சொந்தமானவனும் அல்ல. முஹம்மத் முஸ்லிம்களுக்காக அனுப்பப்பட்ட தூதரும் அல்ல. முஸ்லிம்களாக அறியப்படும் இவர்களும் ஆன்மீகவாதிகளே. இறைவனை அடையும் வழியை முஹம்மத் என்ற இறைத்தூதர் வழியாகப் பெற்று அதில் தம்மை ஐக்கியப்படுத்திக் கொண்டதால் முதல் கட்டமாக இவர்களை 'கட்டுப்பட்டவர்கள்' (முஸ்லிம் என்ற அரபு பதத்திற்கு கட்டுப்பட்டவர் என்று பொருள்) என்று இடுகுறி பெயரால் இறைவன் சுட்டிக் காட்டுகிறான். முஹம்மத் என்ற இறைத்தூதர் வழியாக இறைவனை அடையும் வழியை பெறும் எவரும் 'கட்டுப்பட்டவர் - முஸ்லிம்' என்ற அந்த இடுகுறிப் பெயருக்குள் வந்து விடுவார். 'முஸ்லிம்' என்பது ஒரு இனத்திற்கு சூட்டப்பட்டப் பெயரல்ல என்பதை விளங்குவது அவசியம். எனவே இறைவன் நம்மை நேசிக்க வேண்டும் என்ற தேடலில் நாம் இறங்கும் போது ஏற்கனவே நாம் இருக்கும் மதத்தை ஒரு அடையாள சின்னமாக்கிக் கொண்டு அந்த தேடலை துவங்கக் கூடாது. அது பல முட்டுக்கட்டைகளை நமக்கு ஏற்படுத்தி விடும்.

இந்தியா என்ற நாட்டில் ஒருவர் வாழ்வதால் தன்னை இந்தியன் என்றும், அந்த நாட்டின் உள்ளே இந்த மொழியைப் பேசுவதால் தன்னை தமிழன் என்றும் அடையளப்படுத்திக் கொள்ளும் அதே நியாயம் தான் இறைவனை அடையும் வழியைப் பெற்றப்பிறகு தன்னை முஸ்லிம் என்று அடையாளப்படுத்திக் கொள்வதிலும் அடங்கி இருக்கிறது.

மருத்துவக் கல்விக் கற்றவர் தமக்கு 'டாக்டர்' என்று அடையாளமிட்டுக் கொள்கிறார்,

பொறியியளாளர் ஒருவர் 'இன்ஜினியர்' என்ற அடையாளத்துடன் வெளி உலகில் உலவுகிறார்,

ஒரு நாட்டை சார்ந்தவர் அந்த நாட்டவராக தம்மை அடையாளம் காட்டுகிறார்,

குலமாகவோ - கோத்திரமாகவோ வாழ்பவர்கள் கூட தங்கள் குலத்தையும் - கோத்திரத்தையும் அடையாளமாக்கிக் கொள்கிறார்கள் எனும் போது இறைவனை அடையும் வழியைப் பெற்றவர்கள் 'இறைவனுக்குக் கட்டுபட்டவன் என்ற அர்த்தத்தில் தம்மை முஸ்லிம் என்று அடையாளப்படுத்திக் கொள்வதில் என்ன இழப்பு வந்துவிடப் போகிறது?

எனவே ஆன்மீகத் தேடலில் நாம் இறைவனை நேசிக்கிறோம் என்பதை விட இறைவன் நம்மை நேசிக்கிறானா என்பது அர்த்தம் வாய்ந்த கேள்வியாக பிறக்க வேண்டும் அப்போதுதான் ஆன்மீகத் தேடல் ஒரு முழுமைப் பெற்றதாக அமையும். இறைவன் நம்மை  நேசிக்கின்றானா என்ற கேள்வி ஒரு ஆன்மீகவாதியிடம் என்றைக்கு பிறக்கின்றதோ அன்றைக்கே அவன் அதற்கான விடையை கண்டு பிடிக்கும் தேவைக்கு ஆட்பட்டு விடுகிறான். அவனது தேவை பூர்த்தி செய்யப்படும் வழிகாட்டல் குர்ஆனில் அடங்கியுள்ளது.

'(தூதரே) நீர் கூறும், நீங்கள் இறைவனை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள் (இதன் வழியாக) இறைவன் உங்களை நேசிப்பான் என்று'.
............

பாவங்களுக்கு பரிகாரம்.

அடுத்த முக்கியமான பலம் வாய்ந்த கேள்வி. தவறு - பாவம் செய்வதிலிருந்து விடுபட்ட மனிதர்கள் உலகில் எவராவது உண்டா..? 'எவரும் இல்லை' என்பதே பரிசீலிக்க தேவையில்லாத பதிலாகும்.

எது ஒன்றுக்கும் ஒரு எதிர்வினை - எதிர் செயல் இருக்க வேண்டும் என்பது இயற்கை. அப்படி பார்க்கும் போது பாவத்திற்கான எதிர்வினை - எதிர்செயல் என்ன என்பது கவனிக்கப்படவேண்டிய விஷயமாகும். பாவத்திற்கான எதிர்வினை என்பது விரிவான பதில்களை உள்ளடக்கிக் கொண்டுள்ளது.

நாடுகள் - சட்டங்கள் - பாதுகாப்புகள் - அரண்கள் என்ற அனைத்தும் பாவத்திற்கான எதிர்வினையில் முன்னணியில்    வந்து நிற்கும்.

திட்டமிட்ட குற்றங்கள் அனைத்தும் பாவங்களே என்ற அடிப்படையில் இத்தகைய குற்றவாளிகள் அனைவரும் பாவிகளாவர். பாவங்களுக்கு பரிகாரம் என்ன...? 'தண்டனை' என்பதுதான் சரியான சொல் என்றாலும் அதற்காகவே நீதிமன்றங்கள் - சாசனங்கள் - காவல்துறைகள் என்றிருந்தாலும் எல்லா குற்றவாளிகளும் இங்கு அகப்படுவதுமில்லை. பிடிப்படும் அனைவரும் குற்றவாளிகளாகவே இருப்பதுமில்லை. குற்றவாளிகளாகவே இருந்தாலும் குற்றத்திற்கு முறையான தண்டனைகள் கிடைப்பதுமில்லை. இந்த சட்ட விவாதத்திற்குள் நாம் இப்போது செல்ல வேண்டாம். பாவம் செய்துவிட்ட ஒருவன் மனசாட்சியால் உந்தப்பட்டு அதிலிருந்து மீள நினைக்கிறான். ஆன்மீகவாதியாக இருந்தால் பாவத்திற்கு பரிகாரம் என்னவென்று பார்க்கவே செய்வான்.

இத்தகையோருக்கு வழிகாட்டுகிறது இந்த வசனம்.

(தூதரே) நீர் கூறும்: (மனிதர்களே) நீங்கள் இறைவனை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள் (இதன் காரணத்தால்) இறைவன் உங்களை நேசிப்பான். உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான் என்று..

முஹம்மத் என்ற அந்த மிகப்பெரிய ஆன்மீகத் தலைவரின் வழியாக இறைவனை நேசிப்பவர்கள் - இறைவனால் நேசிக்கப்படுபவர்கள் இவர்களுக்கொரு பரிகார வழிகாட்டல் இருப்பதை இறைவன் இங்கு சுட்டிக்காட்ட தவறவில்லை. இறைவனை அறிந்து அவன் காட்டும் வழியில் வாழ நினைக்கும் ஒருவன் மனிதன் என்ற அடிப்படையில் சிற்சில பாவங்கள் செய்கிறான் என்றால் (அது மனித உரிமை மீறலாக இருக்காத வரையில்) அதை இறைவன் மன்னிப்பதில் எந்த ஒரு ஆச்சர்யமும் இல்லை. அந்த வகையில் இந்த இறைத்தூதரை பின்பற்றுபவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படும் என்றும் இந்த வசனம் கூறுகிறது.

இனி, இந்த வசனம் முஸ்லிம்களுக்கு என்ன பாடம் போதிக்கறது என்பதை பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்.

0 எண்ணங்கள்:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Powered by Blogger