Tuesday, March 22, 2011

விருந்துண்ண வாங்க

அஸ்ஸலாமு அலைக்கும். "விருந்துக்காக அழைப்பவரின் அழைப்பை ஏற்றுக் கொள்வது" நபி (ஸல்) அவர்கள் நமக்கு காட்டிதந்த வழிமுறையாகும். ஆனால் ஒருவரது வருமானம் ஹராமான முறையில் பெறப்பட்டதாக இருக்கும்போது அவருடைய அழைப்பை ஏற்றுகொள்ளலாமா?
Name: Azeezudheen
email: skn_azeesudeen@....
Location: Dubai
Subject: Kelvi

அனுமதிக்கப்பட்ட ஒரு பொருளை ஒருவர் ஹராமான வழியில் பெறுகிறார் அதை அவர் பிறருக்கு கொடுக்கிறார் என்றால் அதைப் பெற்றுக் கொள்வதற்கு மார்க்கத்தில் தடையொன்றும் இல்லை.

பணம் என்பது ஹலாலான ஒன்று. அதை லஞ்சமாக பெற்ற ஒருவர் தன் குடும்பத்திற்காக செலவு செய்கிறார் அல்லது நற்பணிகளுக்கு கொடுக்கிறார் என்றால் லஞ்சம் பெற்றதற்கு அவர் குற்றவாளியாவாரே தவிர அவரிடமிருந்து அதைப் பெற்றுக் கொள்ளும் எவரும் மார்க்கம் அனுமதிக்கப்பட்டவழியில் அதைப் பெறுவதால் அவர்களுக்கு அது ஹராமாகாது.

நபி(ஸல்) அவர்கள் தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் தர்மப் பொருளை ஹராமாக்கிக் கொண்டார்கள். ஹலாலான பொருளை ஒருவர் தரமமாக நபி(ஸல்) அவர்களுக்கு வழங்கினால் அது அவர்களுக்கு ஹராமாகும்.

பாகம் 3, அத்தியாயம் 50, எண் 2576

அல்லாஹ்வின் தூதரிடம் உணவுப் பொருள் கொண்டு வரும் போது இது அன்பளிப்பா? தருமமா? என்று அவர்கள் கேட்பார்கள். தருமம் தான் என்று பதிலளிக்கப்பட்டால் தம் தோழர்களிடம், நீங்கள் உண்ணுங்கள் என்று கூறிவிடுவார்.
.............................
இதை கவனத்தில் கொண்டு கீழுள்ள நபிமொழியைப் பாருங்கள்.

பாகம் 2, அத்தியாயம் 24,எண் 1495 அனஸ்(ரலி) அறிவித்தார்.

தர்மமாகக் கொடுக்கப்பட்ட இறைச்சி நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டது. அப்போது அவர்கள் இது பரீராவுக்குத் தர்மமாகும்; ஆனால் நமக்கு அன்பளிப்பாகும்' என்றார்கள்.

...........................
பாகம் 6, அத்தியாயம் 68, எண் 5279

பாத்திரம் ஒன்றில் இறைச்சி கொதித்துக் கொண்டிருந்த நிலையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (வீட்டுக்குள்) நுழைந்தார்கள். அப்போது அவர்களுக்கு முன் ரொட்டியும் வீட்டிலிருந்த குழம்பும் வைக்கப்பட்டது. அப்போது அவர்கள் 'பாத்திரத்தில் இறைச்சி இருக்கக் கண்டேனே! (அது என்னவாயிற்று?)' என்று கேட்டார்கள். அதற்குக் குடும்பத்தார் 'ஆம்! (இருக்கிறது)ஆனால், அது பரீராவுக்கு தர்மமாக வழங்கப்பட்டதாகும். தாங்கள் தாம் தர்மப் பொருட்களைச் சாப்பிடமாட்டீர்களே?' என்று கூறினர். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'அது பரீராவுக்குத்தான் தர்மம்; நமக்கு அது (பரீராவிடமிருந்து) அன்பளிப்பு' என்றார்கள்.
....................
பரீரா என்ற நபித்தோழியருக்கு ஆட்டிறைச்சி தர்மமாக கிடைக்கின்றது. தர்மம் என்ற நிலையில் அது பரீராவுக்கு ஹலாலாகவும் நபி(ஸல்) அவர்களுக்கு ஹராமாகவும் இருந்தது. தனக்கு கிடைத்த தர்மத்தை பரீரா நபி(ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக கொடுக்கின்றார். அதை நபி(ஸல்) பெற்றுக் கொண்டு (பிறருக்கு விளக்கமளித்து விட்டு) உண்கிறார்கள்.

இதிலிருந்து நமக்கு கிடைக்கும் வழி அனுமதிக்கப்பட்ட வழியா என்பதை மட்டும் பார்த்து விருந்தையோ - இதர எதுவொன்றையோ பெற்றுக் கொள்ளலாம் என்பதை விளங்கலாம்.

இதை இன்னும் சற்று விளக்கமாக சொல்வதென்றால் யுதர்கள் பற்றிய விளக்கத்தை நாம் எடுத்துக் கொள்ளலாம்.

யுதர்கள் மீது வட்டி ஹராமாக்கப்பட்டது ஆனால் அவர்கள் அதை பொருட்படுத்தாமல் வட்டியில் மூழ்கினார்கள்.

وَأَخْذِهِمُ الرِّبَا وَقَدْ نُهُواْ عَنْهُ وَأَكْلِهِمْ أَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ وَأَعْتَدْنَا لِلْكَافِرِينَ مِنْهُمْ عَذَابًا أَلِيمًا

வட்டி வாங்குவது அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தும், அவர்கள் அதை வாங்கி வந்ததன் (காரணமாகவும்,) தவறான முறையில் அவர்கள் மக்களின் சொத்துகளை விழுங்கிக் கொண்டிருந்ததன் (காரணமாகவும், இவ்வாறு தண்டனை வழங்கினோம்), இவர்களில் காஃபிரானோருக்கு (மறுமையில்) நோவினை செய்யும் வேதனையையும் நாம் சித்தப்படுத்தியுள்ளோம் (அல் குர்ஆன் 4:161)

பாகம் 2, அத்தியாயம் 34, எண் 2224

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'

'யூதர்களை அல்லாஹ் சபிப்பானாக! அவர்களுக்குக் கொழுப்பு ஹராமாக்கப்பட்டபோது அதைவிற்று அதன் கிரயத்தை அவர்கள் சாப்பிட்டார்கள்.' என அபூ ஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள்.

யுதர்களைப் பொருத்தவரை அவர்களின் வருமானம் ஹராமான வழியில் இருந்தது என்பதற்கு இந்த வசனமும் நபிமொழியும் சான்றாக உள்ளது.
இவர்களோடு நமக்குள்ள உறவைப் பற்றி குர்ஆன் குறிப்பிடும் போது,

وَطَعَامُ الَّذِينَ أُوتُواْ الْكِتَابَ حِلٌّ لَّكُمْ

வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவும் உங்களுக்கு ஹலாலானதே. (அல்குர்ஆன் 5:5) என்று குறிப்பிடுகின்றது. வேதக்காரர்களில் முக்கியமானவர்களாக கருதப்படுபவர்களைப் பற்றி குர்ஆன் 'அவர்களின் வருமானம் ஹராமான வழியில் இருந்தது' என்று கூறிவிட்டு அவர்களின் உணவு உங்களுக்கு ஹலால் என்றும் குறிப்பிடுகின்றது.

இதிலிருந்து நமக்கு வரும் வழி அனுமதிக்கப்பட்ட வழியாக இருந்தால் நாம் சாப்பிடலாம் பெற்றுக் கொள்ளலாம் என்பதை விளங்க முடிகின்றது.
எனவே ஹராமான வழியில் பொருள் திரட்டுபவர்கள் நம்மை விருந்துக்கு அழைத்தால் அதில் கலந்துக் கொள்வது பற்றி தடையொன்றும் இல்லை. அதே நேரம் அவர்களின் தவறை சுட்டிக்காட்டும் கடமையும் நமக்கு இருக்கின்றது என்பதை மறந்து விடக் கூடாது.

அல்லாஹ் மிக்க அறிந்தவன்

அண்ணன் மனைவி அண்ணியை..

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்). அன்னிய பெண்களை இச்சை இல்லாமல் பார்கலாமா? அதே போன்று அண்ணனுடைய மனைவி, மாமாவுடைய மனைவி போன்றோர்களையும் இச்சை இல்லாமல் பார்க்கலாமா? அப்படி பார்க்க அனுமதி இல்லையெனில் யார் யாரை பார்க்க இஸ்லாம் அனுமதிக்கின்றது? இது பற்றி நமது மார்க்கம் என்ன கூறுகின்றது?
Name: Azeezudheen
email: skn.azeesudeen@....
Location: Dubai
Subject: Question
...............

நமக்கு உரிமையுள்ள மனைவியைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் இச்சையுடன் பார்ப்பதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை.

இச்சையில்லாமல் பார்ப்பது என்பது பொதுவான அனுமதியாகும்.

அண்ணன், தம்பி மனைவிகள் விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையுணர்வுடன் இருப்பது அவசியம்.

ஏனெனில்

முகம் கை தவிர மற்றப் பாகங்கள் முழுதும் மறைந்துள்ள நிலையில் பெண்கள் இருந்தால் அவர்களை தேவைக்காக பார்க்கலாம் என்ற அனுமதி அடங்கியுள்ள வசனம் கீழே!

முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது இன்னும் தங்கள் முன்தானைகளால் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும். (அல்குர்ஆன் 24:31)

வீடுகளில் இருக்கும் போது பெண்கள் சாதாரண உடைகளுடன் இருப்பார்கள். அது அவர்களின் உடலில் முகம் முன் கைகளைத் தவிர மற்றப்பாகங்களை மறைக்காத நிலையில இருந்தால் அவர்கள் மற்ற ஆண்களுக்கு மத்தியில் வெளிவரக் கூடாது. வெளிவரும் சூழ்நிலை ஏற்பட்டால் மறைத்த நிலையிலேயே வர வேண்டும். முகம், கைகளில் முற்பகுதி தெரியும் நிலையில் வெளிப்படலாம் என்பதிலிருந்தே ஆண்கள் அவசியத் தேவைக்காக பெண்களைப் பார்க்கலாம் என்பது விளங்குகின்றது.
வீட்டில் சாதாரணமாக வீட்டு உடைகளுடன் இருக்கும் போது யார் யார் முன்னிலையில் அந்த உடையுடன் வரலாம் என்பதையும் வசனம் தொடர்ந்து விளக்குகின்றது.

(முஃமினான பெண்கள்) தம் கணவர்கள்,
தம் தந்தையர்கள், (பெற்றத் தந்தை - வாப்பா, அத்தா, பெரியத்தா, சின்னத்தா)
தம் கணவர்களின் தந்தையர்கள் (மாமனார்கள், சின்ன பெரிய மாமனார்கள்)
தம் புதல்வர்கள் (மகன்கள்)
தம் கணவர்களின் புதல்வர்கள், (கணவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஆண் குந்தைகள் இருந்தால் அவர்கள்)
தம் சகோதரர்கள் (அண்ணன் தம்பிகள்)
தம் சகோதரர்களின் புதல்வர்கள், (அண்ணன் தம்பிகளின் மகன்கள்)
தம் சகோதரிகளின் புதல்வர்கள், (அக்காள் தங்கைகளின் மகன்கள்)
ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) தளர்ந்து போன முதியவர்கள்.
பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது. (அல்குர்ஆன் 24:31)

திருமணம் செய்ய தடுக்கப்பட்ட பெண்கள் ஆண்களுக்கு முன் சாதாரண உடையில் காட்சியளிக்கலாம். அதாவது மாமி, சின்னம்மா போன்றவர்கள் திருமணம் செய்ய விலக்கப்பட்ட பெண்கள் யார் யார் என்பதை அல்குர்ஆன் 4:23 வசனத்தில் அறியலாம்.

சாதாரண உடையுடன் பார்வையில் படலாம் என்ற பட்டியலில் அண்ணிகள் (அண்ணன் - தம்பி மனைவிகள்) அடங்கவில்லை என்பதால் அவர்கள் முகம் முன்கைகள் தெரியும் நிலையில் மட்டுமே மச்சான்களிடம் (கணவரின் உடன் பிறந்த சகோதரர்களிடம்) இருக்க வேண்டும்.

பெண்களை சாதாரணமாக பார்க்க அனுமதியுள்ளது என்றால் முஃமினான ஆண்கள் தங்கள் பார்வையை தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்ற பொருள் அல்குர்ஆன் 24:30 வசனத்தின் பொருள் என்ன?

இங்கு பார்வையைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்பது பெண்களை விட்டு பார்வையைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்றக் கருத்தில் மட்டும் வரவில்லை. பொதுவாகவே தவறான - பாவமான அனைத்தையும் விட்டு பார்வையைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்ற பொருளில் தான் வந்துள்ளது.

பார்வையில் பாவம் உருவாகும் நிலை இருந்தால் பெண்களை விட்டு பார்வையைத் திருப்பிக் கொள்ள வேண்டும்.

அடிக்கடி சிறுநீர்

அடிக்கடி சிறுநீர் ஒழுகும் நபர் என்ன செய்ய வேண்டும். திரும்ப திரும்ப ஒளு செய்ய வேண்டுமா..?
Name: mussafireen
email: mussafireen@......
Location: sri lanka
Subject: Kelvi
........................
இத்தகைய பிரச்சனையுள்ள ஒருவரும் நபி(ஸல்) காலத்தில் இருந்ததில்லை என்பதால் இதற்கு நேரடியான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. ஆனாலும் இந்த பிரச்சனையுள்ளவர்கள் எப்படி அதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு நெருக்கமான ஆதாரம் கிடைப்பதால் அதை வைத்து இதை புரிந்துக் கொள்ளலாம்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 228

'அபூ ஹுபைஷ் என்பவரின் மகள் ஃபாத்திமா என்ற பெண், நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நான் அதிகம் உதிரப்போக்குள்ள ஒரு பெண். நான் சுத்தமாவதில்லை. எனவே நான் தொழுகையைவிட்டு விடலாமா?' எனக் கேட்டதற்கு, 'இல்லை! அது ஒருவித நோயால் ஏற்படுவதாகும். அது மாதவிடாய் இரத்தமன்று. உனக்கு மாதவிடாய் வரும்போது தொழுகையைவிட்டு விடு; அது நின்றுவிட்டால் இரத்தம் பட்டு இடத்தைக் கழுவிவிட்டுத் தொழுகையை நிறைவேற்று' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 'பின்னர் அடுத்த மாதவிடாய் வரும் வரை ஒவ்வொரு தொழுகைக்கும் நீ உளூச் செய்து கொள்' என்றும் நபி(ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம் கூறினார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

அவ்வப்போது சிறுநீர் சொட்டுகள் வெளியேறுவது போன்ற ஒரு நிலையில் அன்றைக்கு தொடர் இரத்தப் போக்குக்கு ஆட்பட்டப் பெண் 'தொழுகையை விட்டு விடலாமா..' என்று கேட்கும் போது, 'தொழுகையை விட அனுமதியில்லை' என்று நபி(ஸல்) விளக்கியுள்ளார்கள். இதிலிருந்து சிறுநீர் சொட்டுகள் வெளியேறுபவர்கள் தொழுகையிலிருந்து விடுபட முடியாது என்பதை விளங்கலாம்.

சிறுநீரை விட அதிக துன்பமளிக்கக் கூடிய இரத்தப்போக்குள்ளவர்கள் கூட தொழுகையை விட அனுமதியில்லை என்பதை நாம் மிகுந்த கவனத்தில் கொள்ள வேண்டும்.

தொடர் இரத்தப் போக்கைப் பற்றி குறிப்பிடும் போது 'அது நரம்பு நோய்' என்று நபி(ஸல்) குறிப்பிட்டுள்ளார்கள்.

இயற்கைக்கு மாற்றமாக உடம்பில் நிகழும் எதுவோன்றும் நோயின் அடையாளமாகவே இருக்கும் என்பதால் அடிக்கடி சிறுநீர் சொட்டுகள் வெளியேறுவதையும் நாம் அதே அடிப்படையில் எடு்த்துக் கொள்ளலாம். மருத்துவம் செய்யும் அதே வேளையில் ஒவ்வொரு தொழுகைக்கும் அவர்கள் ஒளு செய்துக் கொள்ள வேண்டும்.

தொழுகையில் நிற்கும் போது அந்த நிலையை உணர்ந்தால் அவர்கள் தொழுகையை முறிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஏனெனில் தீர்வே இந்த பிரச்சனைக்கு சொல்லப்பட்டதுதான்.

நமது கட்டுப்பாடுகளை கடந்து நடக்கும் காரியங்களுக்கு இறைவன் நம்மை குற்றம் பிடிக்க மாட்டான்.

மனைவியைக் கொல் (பதில்கள்)

பாகம் 1, அத்தியாயம் 8, எண் 423 ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். \'இறைத்தூதர் அவர்களே! ஒருவர் தம் மனைவியுடன் மற்றோர் ஆடவனைக் காண நேர்ந்தால் அவனைக் கொன்று விடலாமா?\' என்று ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார். (\"அது கூடாது! மாறாக இருவரும் லிஆன் செய்ய வேண்டும்\" என்று நபி(ஸல்) கூறியதும்) அவ்விருவரும் பள்ளியிலேயே லிஆன் செய்தனர். நான் அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். \
இது எனக்கு சரியாகப்படவில்லை. ஏன் இப்படியுள்ளது என்பதை விளக்குங்கள்.
Name: abdul azeez
email: azeez1729@...
Location: abudhabi
Subject: kelvi

இறைவன் அனைத்தையும் அறிந்த நுண்ணறிவாளனாக இருக்கிறான். அவன் வகுத்த சட்டங்கள் சில நேரம் நமது சிற்றறிவிற்கு சரியாக படாவிட்டாலும் கூட அவன் வகுத்துள்ள சட்டங்கள் குறைவில்லாததுதான்.
நமது அறிவின் தரம் கூடும் போது அந்த சட்டங்களில் விளக்கங்கள் நமக்கு கிடைக்கும். அதுவரை நமது தேடலை நாம் தொடரத்தான் வேண்டும்.

ஆண் பெண்ணுக்கு மத்தியிலான உறவுமுறையை - பிரிவை தீர்மானிக்கும் எந்த சட்டமாக இருந்தாலும் அதில் பெண்களுக்கு கூடுதல் பாதுகாப்பு இருக்கத்தான் செய்யும். இதை முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் ஏற்றுள்ளோம்.

லிஆனை சிந்திக்கும் போதும் அதில் பெண்களுக்கு பாதுகாப்பு இருப்பதை உணரலாம்.

ஒரு பெண் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதை அந்தப் பெண்ணின் கணவன் நேரடியாக பார்த்து விடுகிறான். இப்போது அவனது ரத்தம் கொதிக்கும். கட்டுப்படுத்த முடியாத ஆத்திரத்துக்கு அவன் ஆளாவான். இந்நிலையில் தண்டனைக் கொடுக்கும் சட்டத்தை அவன் கையில் கொடுத்தால் உடனடியாக அந்கு ஒரு அல்லது இரு கொலை நடக்கும். அவன் தரப்பிலும் ரோஷமுள்ளவர்கள் தரப்பிலும் இது நியாயம் தான் என்றாலும், இஸ்லாம் இத்தகைய உணர்வுகளை மட்டும் கருத்தில் கொண்டு சட்டம் வகுக்காது. வகுக்கப்படும் சட்டங்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது என்பதிலும் இஸ்லாம் அக்கறைக் கொள்ளும்.

விபச்சாரம் செய்யும் மனைவியை கணவன் கொள்ளலாம் என்ற சட்டத்தை இஸ்லாம் கணவன் கரங்களில் கொடுத்திருந்தால் கணவனால் கொல்லப்படும் மனைவிகள் அனைவருமே விபச்சாரிகளாக சித்தரிக்கப்பட்டு விடுவார்கள். ஆம், பல குடும்பங்களில் கணவர்களுக்கும் மனைவிகளுக்கும் மத்தியில் தீராத சண்டைகள் நடப்பதை நாம் பார்க்கிறோம். பெண்கள் வாய் விட்டு கத்தி தீர்த்து விடுவார்கள். ஆண்களால் அப்படி முடியாது. மனைவி கணவனை வாயால் அடித்தால், கணவன் மனைவியை கையால் அடிப்பான்.

போதை - வரதட்சனை - மாமியார் மருமகள்கள் சண்டைப் பிரச்சனை போன்றவற்றால் முரட்டு கணவன்மார்களால் பெண்கள் தாக்குதலுக்குள்ளாக்கப்படுகிறார்கள். பல நேரங்களில் வரதட்சனைப் போன்ற காரணத்துக்காக குடும்பத்தார் சேர்ந்து தன் வீட்டுக்கு வந்த மருமகளை தீர்த்துக் கட்டுகிறார்கள்.

கணவனின் முரட்டு, மடத்தனமான சுபாவத்தை எதிர்கொள்ள முடியாத பெண்கள் தங்கள் உயிரை விடுகிறார்கள். இது பரவலான நடைமுறையாகிவிட்டதை நாம் பார்க்கிறோம். பெண்ணை இழந்தவர்கள் நீதித் தேடி நீதிமன்றங்கள் செல்கிறார்கள்.

கணவனுக்கென்று இருக்கும் உரிமைகளை அவன் மீறும்போது தான் அங்கு நீதி தலையிடும். அவன் உரிமைக்குட்பட்டதை அவன் செய்யும் போது அதை யாரும் தட்டிக் கேட்க முடியாது. இந்த அடிப்படையை மனதில் நிறுத்திக் கொண்டு தொடருங்கள்.

விபச்சாரும் செய்யும் பெண்ணை கொல்லும் உரிமையை கணவன் கையில் கொடுத்தால், வரதட்சனைப் போன்ற பொருளாதாரத்திற்காக கொலைச் செய்யப்படும் மனைவி விபச்சாரத்திற்காகத்தான் கொல்லப்பட்டாள் என்று ஆகிவிடும்.

போதையால் கணவன் மனைவியை கொலை செய்தால் விபச்சாரத்திற்காக கொலை செய்தேன் என்று சொல்லி தப்பிக்க முடியும்.

இன்னப்பிற ஏதோ காரணத்துக்காக சாகடிக்கப்படும் பெண்கள் அனைவரும் கணவனின் வாக்கு மூலத்தால் விபச்சாரிகளாவார்கள். உயிரை விட்டது மட்டுமின்றி சமூகத்தில் இழிபெயரும் நிலைக்கும். நியாயம் கிடைக்க வழியில்லாமல் போகும். இன்னும் நாம் அறியாத பல நுணுக்கங்களுக்காக கூட இறைவன் கணவர்கள் கைகளில் அந்த சட்டத்தை கொடுக்காமல் தடுத்திருக்கலாம்.

பெண்களுக்கு சாதகமா..?

விபச்சாரம் செய்யும் பெண் கணவனால் நேரடியாக பிடிக்கப்பட்ட பிறகும் அவளை தண்டிக்காமலிருப்பது பெண்களுக்கு சாதகமாக - தவற வழி வகுப்பதாக ஆகாதா..? என்ற சிந்தனை எழலாம்.

ஒரு வகையில் சிந்தித்துப் பார்த்தால் மரண தண்டனை கொடுத்து கதையை முடிப்பதை விட தன்னை தானே சபித்துக் கொண்டு சமுதாய மத்தியில் இழி நிலையில் வாழ்வது அதை விட பெரிய தண்டனையாகும். தன் மனைவி விபச்சாரம் செய்துவிட்டால் என்று கணவன் குற்றம் சுமத்துகிறான். அதை நிரூபிக்க அவனிடம் நான்கு சாட்சிகள் இல்லை. சாட்சிகளில்லாத நிலையில் குற்றத்தை நிரூபிக்க முடியாது. உலக நீதிமன்றங்கள் என்றால் சாட்சிகள் இல்லாததால் கணவனை எச்சரித்து அவனோடு மனைவி சேர்ந்து வாழ வேண்டும் என்று உத்திரவு பிறப்பிக்கும். உண்மையில் மனைவி தவறியதை நேரடியாக கண்ட கணவன் நீதிமன்ற உத்திரவால் மீண்டும் அவளோடு சேர்ந்து வாழ முடியுமா...? அது பல்வேறு சிக்கல்களை இருவருக்கும் மத்தியில் ஏற்படுத்தி விடும். அதனால் தான் இஸ்லாம் மாற்று வழியை முன் வைத்துள்ளது.

சாட்சிகள் இல்லாத நிலையில் கணவனால் குற்றம் சுமத்தப்பட்டால் அவ்விருவரும் மக்கள் மன்றத்தில் தன்னைத் தானே சபித்துக் கொண்டு கணவன் - மனைவி உறவைத் துண்டித்துக் கொள்ள வேண்டியதுதான். இது அவர்களிருவரும் மீண்டும் சேர்ந்து வாழ முடியாத அளவிற்குள்ள நிரந்தர பிரிவாகும்.

இதில் யாரொருவர் பொய் சொல்லி இருந்தாலும் அவர்கள் இறைவனிடம் குற்றவாளியாகி நிற்பார்கள். இந்த விபரம் குர்ஆனில் 24வது அத்தியாயத்தின் 5 முதல் 9 வரையுள்ள வசனங்களில் காணலாம்.

இஸ்லாமிய ஆட்சியில்லாத நாடுகளில்,

இஸ்லாமிய ஆட்சியில்லாத நாடுகளில் வாழும் முஸ்லிம்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும். அவர்களும் ஊரிலுள்ள பொதுஜமாஅத்கள் முன்னிலையில் தன்னை சாபமிட்டுக் கொண்டு பிரியலாம்.

நான்கு முறை 'தாம் உண்மைச் சொல்வதாக சத்தியமும், ஐந்தாம் முறை தம் மீது தாமே சாபமிட்டுக் கொள்வது என்பதும் அத்துனை சுலபமான விஷயமல்ல. ஒரு பெரும் சக்தியை நம்பி அதற்கு கட்டுப்படும் மனநிலையைப் பெற்றவர்கள் இதில் விளையாட மாட்டார்கள் என்பதையும் நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

தலைப்பிறை தவறலாமா?

காலம் முழுதும் உலகவாழ்க்கையையே குறிக்கோளாக கொண்டு உழன்றுகொண்டிருக்கும் மனிதர்களுக்கு மறுமை வாழ்க்கையை நினைவூட்டுவதற்காகவும், அங்கு வெற்றிப்பெறுவதற்காகவும் இறைவனால் முன்வைக்கப்பட்ட அமல்களில் ரமளானும் முக்கிய இடத்தை வகிக்கின்றது.

குர்ஆன் இறங்கிய மாதம் என்பதால் அந்த மாதத்தையும் குர்ஆன் இறங்கிய இரவு என்பதால் லைலதுல்கத்ர் இரவையும் இறைவன் மிகப் பெரிய அந்தஸ்த்துகளுடன் சிறப்பித்துள்ளான். அத்தகைய புனிதமாதத்தை நோக்கி நாம் மிக அருகில் சென்றுவிட்டோம்.

ரமளான் வந்து விட்டால் வழக்கம்போல முஸ்லிம்களிடம் பல சர்ச்சைகள் உருவாகி விடும் அதில் முதன்மையானது ரமளானை தீர்மானிக்கும் பிறை.
பிறை பார்த்து நோன்பை அடைவது உலகெங்கும் ஒரே நாளிலா, அந்தந்த நாடுகளுக்கா, அந்தந்தப் பகுதிகளுக்கா, மாநிலங்களுக்கு தனி பிறையா, லோக்களில் டவுன் ஹாஜிகளின் அறிவிப்பிலா, ஜமாஅத்துல் உலமா தீர்மானத்திலா என்று முஸ்லிம்களுக்கு மத்தியில் மாறுபட்ட கருத்துக்கள் எழும். நாம் எப்படி முடிவு செய்வது என்று அவசியம் பரிசீலிக்க வேண்டும். ஏனெனில் சில ஊர்களில் (நம்மூர் உட்பட) பலர் நோன்புடன் இருக்கும் போது பலர் பெருநாளில் இருக்கிறார்கள். பெருநாள் கொண்டாட்டங்களில் நோன்பு அல்லது நோன்பு நாளில் பெருநாள் கொண்டாட்டம். இது முறையா... இன்னும் சில ஊர்களில் மூன்று நாட்கள் பெருநாள் தொழுகை நடக்கின்றது. இது எந்த வகையில் நியாயம்?

வணக்க வழிபாடுகள் அனைத்திலும் ஒரே சீராக இயங்க வழிகாட்டும் இஸ்லாம் நோன்பில் மட்டும் வழிகாட்டவில்லை என்பது போல நாம் அலட்சியமாக இருக்கக் கூடாது. எனவே இது குறித்து ஒரு விவாதகளத்தை துவங்குவோம். ஆதாரங்களை அலசுவோம். எது சரியோ அதை நாமும் பின்பற்றி நம் குடும்பங்ளுக்கும் தெரிவிப்போம் என்ற அடிப்படையில் "ரமளான் பிறை"யை உங்கள் பார்வைக்கு வைக்கிறோம். அவசியம் உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள்.

فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ

உங்களில் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு வைக்கட்டும் (அல்குர்ஆன் 2:185)

ஒருமாதத்தின துவக்கம் முதல் பிறையில் தான் உள்ளது. பிறை பிறந்து அதை பார்த்து மாதத்தை அடைந்த பிறகும் எங்கள் பகுதியில் - எங்கள் நாட்டில் - தெரியவில்லை அதனால் நாங்கள் ரமளானை அடையவில்லை என்று சொல்ல முடியுமா...? முஸ்லிம்களில் ஒருவர் ரமளான் பிறை பார்த்து உறுதிபடுத்தி விட்டால் போதும் என்பது நபி(ஸல்) நமக்கு கற்றுக் கொடுத்துள்ள பாடம். அப்படி பார்த்து அறிவித்த பிறகும் நாம் மறுக்கிறோம் என்றால் இதை எப்படி எடுத்துக் கொள்வது? எனவே அந்த புனித மாதத்தின் ஒரு நாளையும் நாம் முன் பின் என்று ஆக்கி விடாமல் தேர்ந்தெடுப்பதற்கு பிறை குறித்து தீர்க்கமாக சிந்திக்க உங்களை அழைக்கிறோம். எதிர்கருத்தோ - ஆதரவு கருத்தோ - மேலதிக சந்தேகமோ எதுவாக இருந்தாலும் பதியுங்கள்.
-------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும், ஜனாப் அபுதமீம் ஹாபிஸ் கலீமுல்லா உமரி மதனி அவர்கள் ஆய்வு நடத்தி ஒரே நாளில் உலகம் முழுவதும் ஒரே பிறையை ஏற்றுக்கொள்வது இயலாது என விளக்கிவுள்ளார்களே. தங்கள் விளக்கம் என்ன?அன்புடன்அன்சாரி.
-------------------------------------------
வஅலைக்குமுஸ்ஸலாம்.
பல சகோதரர்களும் அறிஞர்களும் அந்த "ஏற்றுக்கொள்ள முடியாது" என்ற கருத்தில் இருப்பதை நாமும் அறிவோம். இது விரிவாக அணுகி அலச வேண்டிய ஒன்றாகும். எதிர்கருத்துள்ளவர்கள் ஆன்லைனில் விவாதிக்க முன் வந்தால் இது குறித்து விளக்கலாம். அல்லது ஏற்றுக்கொள்ள முடியாது என்பதற்கான காரணத்தை நீங்கள் முன் வைத்தால் அதற்கான பதிலை பார்க்கலாம்.

ஒரே நேரத்தில் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதுதான் உண்மை. ஒரே நாளில் ஏற்றுக் கொள்ள முடியாது என்பது சரியல்ல. அந்தந்தப் பகுதியில் பிறைப் பார்க்க வேண்டும் என்பவர்களிடம் நாமும் கேள்விகளை வைப்போம். அப்போது அதன் சிக்கல், ஆதாரங்களுக்கு மாற்றமான நிலை விளங்கும்.
----------------------------------------
எனக்கு பிறை சம்பந்தமாக சில சந்தேகங்கள் உண்டு அவைகள்:

1) "பிறை பார்த்து நோன்பு வையுங்கள், பிறை பார்த்து நோன்பை விடுங்கள்" என்பது ஹதீஸாக உள்ளது. டெலிபோன், சட்டேளிட் போன்ற நவீன கால தகவல் தொடர்பு சாதனங்கள் எதுவரை? நாம் நம் கண்களால் பிறை பார்த்து நோன்பு பிடிப்பது தானே சரியாக இருக்கும்?

2) உலகில் பிறை, காலம் முழுவதும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தான் உதிக்குமா / உதிக்கிறதா?

3) அவ்வாறு உதிக்கும் பகுதி மாறுபடாது என்பது தெளிவானால் எந்த பகுதியில் முதல் பிறை பிறக்கிறது?

4) அவ்வாறு உதிக்கும் பகுதி மாறுபடும் என்கிற பட்சத்தில் அதனை நாம் எவ்வாறு அறிவது?

5) பிறை பார்த்தாகிவிட்டது என்று உலகில் எங்கு கூறப்பட்டாலும் அதனை நாம் எடுத்துக்கொள்ள வேண்டியது தானா?

அன்புடன் ஹபீப்
--------------------------------------
அன்புச் சகோதரர் ஹபீப் அவர்களுக்கு வஅலைக்குமுஸ்ஸலாம்.

அல்லாஹ் உங்கள் ஆர்வத்தையும் - மார்க்க அறிவையும் அதிகப்படுத்துவானாக.

நீ்ங்கள் கேட்டுள்ள கேள்விகளுக்குரிய பதிலை வரிசையாகப் பார்ப்போம். முதல் கேள்வி மார்க்க அடிப்படையில் ஆய்வுச் செய்ய வேண்டியவையாகும். அதை விரிவாக பார்த்து விட்டு மற்ற கேள்விகளுக்கு செல்வோம். இன்ஷா அல்லாஹ்.

1) "பிறை பார்த்து நோன்பு வையுங்கள், பிறை பார்த்து நோன்பை விடுங்கள்" என்பது ஹதீஸாக உள்ளது. டெலிபோன், சட்டேளிட் போன்ற நவீன கால தகவல் தொடர்பு சாதனங்கள் எதுவரை? நாம் நம் கண்களால் பிறை பார்த்து நோன்பு பிடிப்பது தானே சரியாக இருக்கும்? ஹபீப்.

ஒரே தலைப்பிறையின் கீழ் முஸ்லிம் உம்மத் ஒன்றுப்பட வேண்டும் என்று நாம் கூறிவருகிறோம். அதற்கு வலுவான ஆதாரமே நீங்கள் குறிப்பிடும் ஹதீஸ்தான். ஆனால் அந்த ஹதீஸை சரியாக புரிந்துக் கொள்ளாதவர்கள் அந்தந்தப் பகுதிக்கு அந்த ஹதீஸை ஆதாரமாக்குகிறார்கள். ஹதீஸின் வாசகத்தைப் பார்த்து விட்டு தொடர்வோம்.

‏حدثنا ‏ ‏آدم ‏ ‏حدثنا ‏ ‏شعبة ‏ ‏حدثنا ‏ ‏الأسود بن قيس ‏ ‏حدثنا ‏ ‏سعيد بن عمرو ‏ ‏أنه سمع ‏ ‏ابن عمر ‏ ‏رضي الله عنهما ‏ ‏عن النبي ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏أنه قال ‏ ‏إنا أمة أمية لا نكتب ولا نحسب الشهر هكذا وهكذا ‏ ‏يعني مرة تسعة وعشرين ومرة ثلاثينhttp://hadith.al-islam.com/Display/Display.asp?Doc=0&Rec=3006

நாம் உம்மி சமுதாயமாவோம். எழுதுவதை அறிய மாட்டோம்; விண் கலையையும் அறிய மாட்டோம். மாதம் என்பது இப்படியும் அப்படியும் இருக்கும்; அதாவது சில வேளை இருபத்தொன்பது நாள்களாகவும் சில வேளை முப்பது நாள்களாகவும் இருக்கும்!" என்று நபி(ஸல்) குறிப்பிட்டுள்ளார்கள். (புகாரி)இந்த ஹதீஸையும் அடுத்த ஹதீஸையும் கவனத்தில் கொண்டு தொடருங்கள்.

‏حدثنا ‏ ‏آدم ‏ ‏حدثنا ‏ ‏شعبة ‏ ‏حدثنا ‏ ‏محمد بن زياد ‏ ‏قال سمعت ‏ ‏أبا هريرة ‏ ‏رضي الله عنه ‏ ‏يقول ‏ ‏قال النبي ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏أو قال قال ‏ ‏أبو القاسم ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏صوموا لرؤيته وأفطروا لرؤيته فإن ‏ ‏غبي ‏ ‏عليكم فأكملوا عدة شعبان ثلاثينhttp://hadith.al-islam.com/Display/Display.asp?Doc=0&Rec=3000

"பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள்; பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாள்களாக முழுமைப் படுத்துங்கள் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். (புகாரி உட்பட பல நூல்களில் இந்த செய்தி பதியப்பட்டுள்ளது).

முதல் செய்தியில் நபி(ஸல்) முக்கிய தகவலை கொடுத்துள்ளார்கள். அதாவது அவர்களின் சமுதாயம் எழுதப்படிக்கத் தெரியாத - பாமர - சமுதாயம். அந்த சமுதாயத்திற்கு விஞ்ஞானம் பற்றிய தெளிவோ விண்கலையை ஆய்வு செய்யும் திறனோ கிடையாது. அதனால் மாதத்தை இருபத்தி ஒன்பதாகவோ - முப்பதாகவோ முடிவு செய்துக் கொள்ள வேண்டியதுதான்.

ரமளான் பற்றிய பாடத்தில் புகாரி இமாம் இந்த ஹதீஸை பதிவு செய்துள்ளார்கள். 'நமக்கு விண்கலைப் பற்றிய அறிவு கிடையாது" என்று நபி(ஸல்) குறிப்பிட்டுள்ளதிலிருந்து விண்கலைப் பற்றிய அறிவு பெற்றவர்கள் வருவார்கள் அவர்களின் துள்ளியமான ஆய்வை - அறிவை ஏற்கலாம் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்கள். இல்லையென்றால் ரமளான் மாதம் பற்றி பேசும் போது விண்கலை அறிவு பற்றி குறிப்பிட வேண்டும் என்கிற அவசியமில்லை. பிறை கண்டு ரமளானை தீர்மானிக்கும் விஷயத்தில் நபி(ஸல்) தகுந்த இடத்தில் விண்கலையைப் பற்றி பேசியுள்ளார்கள் என்பதிலிருந்து அவர்களுக்கு பிறகு வளர்ந்து வரும் விண்ணாய்வுக்கு அவர்கள் வழிகாட்டி சென்றுள்ளார்கள் என்பது தெளிவாக விளங்குகின்றது.

அடுத்து பிறைப் பார்த்து நோன்பு வையுங்கள் பிறைப் பார்த்து நோன்பை விடுங்கள் என்ற எந்த ஒரு ஹதீஸிலும் 'கண்களால் பிறைப் பார்க்க வேண்டும்' என்ற பதம் வரவேயில்லை. பிறைக் கண்டு - பார்த்து நோன்பு வையுங்கள் என்றே நபி(ஸல்) குறிப்பிட்டுள்ளார்கள். அப்போதைய மக்களுக்கு கண்களால் பார்ப்பது மட்டுமே தீர்வாக இருந்தது. வேறு வழியொன்றும் இல்லை. அதனால் அவர்கள் கண்களால் பார்த்து தீர்மானித்தார்கள். கண்களால் பார்க்க முடியாத சந்தர்பங்களில் மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்துக் கொண்டார்கள். அவ்வளவுதான். கண்களால் பார்க்க வேண்டும் என்ற கட்டளை எதுவுமில்லை. நாம் இப்படி சொன்னவுடன் யாராவது அந்த ஹதீஸில் இடம் பெறும் அரபு வார்த்தையை எடுத்துக் காட்டி 'கண்களால் பார்க்க வேண்டும்' என்று வாதிக்கலாம்.

"ருஃயதஹு" என்ற பதம் சம்பந்தப்பட்ட ஹதீஸ்களில் வருகின்றன. 'அதைப் பார்த்து' " என்பது அதன் பொருள். எனவே பார்க்கத்தான் வேண்டும் என்று வாதிக்கலாம். ருஃயத் என்ற அரபி பதம் விரிந்த பொருட்களை உள்ளடக்கியதாகும். பார்த்தல், ஆய்வு செய்தல், கேட்டறிதல் போன்ற பொருள்கள் இந்த பதத்திற்கும் இதன் துணைப்பதங்களுக்கும் உண்டு. இதைப் புரிந்துக் கொள்வதற்கு மிகப் பெரும் ஆராய்சி எதுவும் தேவையில்லை. எல்லோரும் அறிந்த குர்ஆனின் ஒரு அத்தியாயத்தி்ன் துவக்க வசனத்திலிருந்தே இதை விளக்கி விடலாம்.

யானை அத்தியாயம் என்று பெயர் பெற்ற சூரத்து ஃபீல் என்ற அத்தியாயத்தின் ஆரம்ப வசனத்தை இறைவன் இவ்வாறு ஆரம்பிக்கிறான்.

أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ

யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? ( அல்குர்ஆன் 105:1)

கஃபாவை அழிக்க வந்த யானை படையினரை அல்லாஹ் அழித்த விபரத்தை இங்கு சுட்டிக்காட்டி (நபியே) நீர் பார்க்கவில்லையா..? என்று கேட்கிறான். "பார்க்கவில்லையா" என்று மொழி பெயர்க்கும் இடத்தில் 'தர' என்ற பதம் வருகின்றது. ருஃயத் பதத்தை சேர்ந்த பதம் தான் இது. இந்த வசனத்திற்கு 'பார்க்கவில்லையா" என்று பொருள் கொள்ளவே முடியாது. ஏனெனில் நபி(ஸல்) பிறப்பதற்கு முன்பே யானைப்படையினர் அழிக்கப்பட்டு விட்டனர். அழிக்கப்பட்டப்பின் பிறந்து, நாற்பது வயதை கடந்த பின் நபி(ஸல்) அவர்களிடம் இறைவன் இப்படி கேட்கிறான் என்றால் 'பார்க்கவில்லையா" என்ற அர்த்தத்தில் கேட்கவில்லை. அறியவில்லையா, செய்தி கிடைக்கவில்லையா என்ற அர்த்தத்தில் தான் அந்த பதத்தை பயன்படுத்துகிறான்.

எனவே நோன்பு பற்றி வரும் அந்த ஹதீஸுக்கு பிறையை பார்த்து - அறிந்து நோன்பு வையுங்கள். பிறையை பார்த்து - அறிந்து நோன்பை விடுங்கள் என்பதே சரியான பொருளாகும். பார்க்கவோ, அறியவோ முடியாத சந்தர்பங்களி்ல் முந்தைய மாதமான ஷஃபானை 30 நாட்கள் என்று கணக்கிட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

வானவியலைப்பற்றி நபி(ஸல்) அன்றைக்கே குறிப்பிட்டுள்ளதாலும், கண்களால் பார்க்க வேண்டும் என்ற கட்டளை வராததாலும் அந்தந்தப் பகுதியில் பிறைப் பார்க்க வேண்டும் என்ற வாதம் ஆதாரமற்றுப் போய் விடுகின்றது. பிறை செய்தி கிடைத்தால் அதை ஏற்று நோன்பை துவங்கி விட வேண்டும் என்பதே முஸ்லிம்களை ஐக்கியப்படுத்தும் சரியான முடிவாக இருக்க முடியும். (அல்லாஹ் மிக்க அறிந்தவன்)

ஒரு பிறையையே அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்பதற்குரிய அழுத்தமான அடுத்த ஆதாரத்தை பார்த்து விட்டு மற்றக் கேள்விகளுக்கு நகர்வோம். இன்ஷா அல்லாஹ்.
------------------------------------
ஒவ்வொரு மாதத்திற்கும் தலைப்பிறை ஒன்றுதான்

அன்புச் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.

ரமளான் பிறையின் கருத்து வேறுபாட்டை களைந்து முஸ்லிம் சமுதாயத்தில் ஏற்பட்டு நீடிக்கும் இரண்டு, மூன்று நாட்கள வித்தியாசத்தில் நோன்பு - நோன்புப் பெருநாள் என்ற நிலை தவறு என்பதை புரிநதுக் கொள்ள வேண்டும் என்பதற்காக அது பற்றி பேசி வருகிறோம். இந்த வருட ரமளானில் முதல் பிறை அறிவிக்கப்பட்டவுடன், "இது நம்மை கட்டுப்படுத்தாது" என்று அலட்சியமாக இருந்து விடாமல் நாம் நம் குடும்பங்களுக்கும் நமக்கு தெரிந்தவர்களுக்கும் பிறை அறிவிப்பை எத்தி வைத்து நோன்பு பிடிக்க சொல்ல வேண்டும். முந்தைய பதிவில் இதற்கான ஆதாரத்தை ஓரளவு கண்டோம். இப்போது தலைப்பிறை ஒன்றுதான் என்பதற்கான அடுத்த வலுவான ஆதாரத்தைக் காண்போம்.

فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ

உங்களில் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு வைக்கட்டும் (அல்குர்ஆன் 2:185)

இந்த வசனத்தில் "மாதத்தை அடைகின்றாரோ" என்று இறைவன் குறிப்பிடுவதிலிருந்து எல்லோராலும் ஒரே நேரத்தில் மாதத்தை அடைய முடியாது என்று விளங்கலாம். உதாரணமாக சவுதியில் இரவு 6 மணிக்கு பிறை தெரிகின்றது என்று வைத்துக் கொள்வோம். இதே நேரத்தில் சவுதி அரேபியாவுக்கு கீழுள்ள கீழ் திசை நாடுகள் இரவின் உள்ளே சென்று விடும். இந்தியா 8.30 அடைந்திருக்கும். அதே போன்று சவுதிக்கு மேல்திசை நாடுகள் பகல் பொழுதிலும் இரவை நெருங்கியும் வந்துக் கொண்டிருக்கும். எனவே சவுதியில் பிறை தெரியும் போது அவர்கள் மட்டும் தான் அந்த நேரத்தில் அந்த மாதத்தை அடைகிறார்கள். இப்போது சவுதிக்கு 2 மணி நேரத்துக்கு முன் இரவை அடைந்த நாம் (இந்தியா) அந்த மாதத்தை அடைந்து விட்டோமா இல்லையா....? இந்தக் கேள்வியை முக்கியமாக கவனத்தில் கொண்டு தொடருங்கள்.

உங்களில் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு வைக்கட்டும். என்ற வசன அடிப்படையில் மாதத்தை அடைந்தவர்கள் இரவில் தான் நோன்பு வைக்கப்பட வேண்டும். அதாவது இரவு 6 மணி முதல் நோன்பை துவங்க வேண்டும். ஆனால் யாரும் அப்படி செய்வதில்லை. 6 மணிக்கு பிறை தெரிந்தாலும் அன்று காலை வரை பொருத்திருந்து 5 மணிக்கு தான் முதல் நோன்பின் உள்ளே செல்கிறோம். இந்த இடைப்பட்ட நீண்ட பொழுதின் அர்த்தம் என்ன? என்பதை சற்று சிந்தித்துக் கொண்டு கீழுள்ள குர்ஆன் வசனத்தை அணுகுங்கள்.

يَسْأَلُونَكَ عَنِ الأهِلَّةِ قُلْ هِيَ مَوَاقِيتُ لِلنَّاسِ وَالْحَجِّ وَلَيْسَ الْبِرُّ بِأَنْ تَأْتُوْاْ الْبُيُوتَ مِن ظُهُورِهَا وَلَـكِنَّ الْبِرَّ مَنِ اتَّقَى وَأْتُواْ الْبُيُوتَ مِنْ أَبْوَابِهَا وَاتَّقُواْ اللّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
பிறைகளைப் பற்றி (நபியே!) உம்மிடம் கேட்கின்றனர். ''அவை மக்களுக்கு காலம் காட்டுகின்றது, ஹஜ்ஜை அறிவிக்கின்றது'' எனக் கூறுவீராக! வீடுகளுக்குள் அதன், பின் வழியாக வருவது நன்மை அன்று. (இறைவனை) அஞ்சுவதே நன்மை. எனவே வீடுகளுக்கு வாசல்கள் வழியாகவே செல்லுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். இதனால் வெற்றி பெறுவீர்கள். (அல்குர்ஆன் 2:189)

இந்த வசனத்தில் இறைவன் "பிறை மக்களுக்கு காலம் காட்டுகின்றது - ஹஜ்ஜை அறிவிக்கின்றது" என்று இரண்டு கருத்துக்களை தெளிவு படுத்தியுள்ளான். ஹஜ்ஜை அறிவிக்கும் அதே பிறைத்தான் நோன்பையும் அறிவிக்கின்றது. (ஆனால் நாம் ஹஜ்ஜுக்கு ஒரு பிறை - நோன்புக்கு ஒரு பிறை என்று வேறுபடுத்துகிறோம். இதை ஒருபக்கம் வைப்போம்)

இறைவன் பிறைப்பற்றி சுட்டிக்காட்டி விட்டு "வீடுகளுக்கு அதன் முன் வாசல் வழியாக வாருங்கள். பின் வாசல் வழியாக வருவது நன்மையல்ல" என்ற செய்தியையும் சொல்கிறான். (அரபுகளிடம் இருந்த ஒரு மூட பழக்கதை இது சுட்டிக் காட்டினாலும்) அதில் பிரிதொரு முக்கிய சட்டமும் உள்ளது. ரமளானை வீடு என்று உவமையாகக் கொண்டால் அதன் வாசல் என்பது முதல் ஸஹர் தான். வாசல் வழியாக உள்ளே நுழையுங்கள் என்ற கட்டளைப்படி சவுதியில் பிறைத்தெரிந்தாலும் நாம் தான் முதலில் ஸஹர் செய்து ரமளான் உள்ளே செல்ல வேண்டும். சவுதியில் பிறைத் தெரிந்த பிறகு அவர்களுக்கு முற்பகுதியில் உள்ள நாம் நோன்பைத் துவங்காமல் அவர்களை சுற்றி வந்து அடுத்த நாள் நோன்பைத் துவங்குகிறோம் என்றால் வீடுகளுக்கு பின் வழியாக நுழைவதாகின்றது. பின் வழியாக உள்ளே நுழைவது நன்மையில்லை என்ற இறைவனின் வசனத்தை நாம் கணக்கில் எடுத்துக் கொண்டு அஞ்சினால் பிறை செய்தி கிடைத்தவுடன் முதல் ஸஹருக்கு தயாராகி விடலாம்.

இதை இன்னும் வலுபடுத்தும வசனத்தையும் பார்ப்போம்.

رَبُّ الْمَشْرِقَيْنِ وَرَبُّ الْمَغْرِبَيْنِ

இரு கீழ்திசைகளுக்கும் இறைவன் அவனே, இரு மேல்திசைகளுக்கும் இறைவன் அவனே (அல்குர்ஆன் 55:17)

இரு கீழ் திசைகளும் மேல்திசைகளும் பூமியிலிருக்கும் என்ற பேருண்மையை அன்றைக்கு அறிவித்த குர்ஆனில் பிறைத் தெரிந்த பிறகு அதன் கீழ் திசை - மேல் திசை நாடுகள் என்னவென்று பார்க்க வேண்டும் சவுதியில் பிறை கண்டால் - தெரிந்தால் - கணித்தால் அதன் கீழ் திசை நாடுகளில் நாம் வந்து விடுவோம். கீழ்திசை என்று இறைவன் குறிப்பிடுவதிலிருந்து பிறைத் தெரிந்து விடியும் வரை உள்ள இரவு நாடுகள் அனைத்தும் அந்த பிறைக்கு உட்பட்டு விடுகின்றது என்ற முக்கிய செய்தியை இறைவன் சுட்டிக்காட்டியுள்ளான்.

எனவே இதுவரைப் பார்த்த ஆதாரங்களின் அடிப்படையில் தலைப்பிறை உலகிற்கு ஒரே பிறைத்தான் என்பதை விளங்கலாம்.

ரமளானை அறிவிக்க பிறை பிறந்து விட்ட பிறகும் நாம் வகுத்துக் கொண்ட பூமியின் எல்லைக் கோடுகளை காரணம் காட்டி 'இது எங்களுக்குரிய பிறையல்ல" என்று ஒதுங்குவது மார்க்க அடிப்படையில் சரிதானா என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

பிறை பிறந்து ரமளான் அறிவிக்ப்பட்டு விட்ட பிறகும், வெட்கப்பட்டு கொண்டு அல்லது ஊரோடு ஒத்துபோவோம் என்ற பலவீனமான எண்ணத்தில் அல்லாஹ் அறிவித்த ரமளானை நாம் அலட்சியப்படுத்தினால் குற்றவாளியாகி விடுவோம். இந்த அலட்சியம் பெருநாள் தினத்தில் நோன்பு வைக்கக் கூடாது என்ற நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கையையும் புறக்கணிக்க வைக்கும் என்பதை அஞ்சி தலைப்பிறைக் குறித்து முடிவு செய்யுமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

(இது குறித்து ஐயம் இருந்தால் எழுதுங்கள்)

இனி சகோதரர் ஹபீபின் அடுத்தக் கேள்விக்கு நகர்வோம். இன்ஷா அல்லாஹ்.
----------------------------------------------

சகோதரர் ஹபீப் அவர்களின் அடுத்தக் கேள்விகளை காண்போம்.

2) உலகில் பிறை, காலம் முழுவதும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தான் உதிக்குமா / உதிக்கிறதா?

3) அவ்வாறு உதிக்கும் பகுதி மாறுபடாது என்பது தெளிவானால் எந்த பகுதியில் முதல் பிறை பிறக்கிறது?

4) அவ்வாறு உதிக்கும் பகுதி மாறுபடும் என்கிற பட்சத்தில் அதனை நாம் எவ்வாறு அறிவது? "ஹபீப்"

وَالْقَمَرَ قَدَّرْنَاهُ مَنَازِلَ حَتَّى عَادَ كَالْعُرْجُونِ الْقَدِيمِ

சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (நிலைகளை) ஏற்படுத்தியிருக்கின்றோம். பழைய பேரீத்த மட்டையைப் போலாகின்றது (36:39)

இந்த வசனம் சந்திரனுக்கென்று ஒரு குறிப்பிட்ட (மாறுபட்ட) நிலைகள் உள்ளன என்பதை அறிவிக்கின்றது. வருடத்தில் சந்திர ஆண்டு சூரிய ஆண்டைவிட 11 நாட்கள் குறைவதால் அமவாசைக்கு பிறகுள்ள முதல் பிறை எப்போதும் ஒரே இடத்தில் தோன்றாது. ஒரே இடத்தில் தோன்றும் என்று விஞ்ஞானமும் சொல்லவில்லை.

அது மாறுபட்ட பகுதிகளில் தோன்றும் என்பதால் குறிப்பிட்ட பகுதியை முதல் பிறைக்கான அடையாளமாக்க முடியாது என்பதை விளங்கலாம். அது எங்கு தெரிகின்றது என்பது முக்கியமல்ல. பூமியின் எல்லைகள் என்பது நமது நிர்வாக வசதிக்காக நாம் வகுத்துக் கொண்டதாகும். இந்த எல்லைகள் மனிதனால் பன்னெடுங்காலமாக மாற்றங்களுக்குள்ளாக்கப்பட்டு வருகின்றன. எனவே எல்லைகளை கருத்தில் கொள்வது சந்திரனை தீர்மானிக்கும் அளவுகோலாக்க முடியாது.
அமவாசைக்கு அடுத்து முதல் பிறை பிறந்து விட்டது என்பதே நாட்களை தீர்மானிக்கும் அளவாக எடுக்க வேண்டும்.

உதிக்கும் பகுதி மாறுபடும் என்கிற பட்சத்தில் அதனை நாம் எவ்வாறு அறிவது? "ஹபீப்"

நாம் நேரடியாக அறிவதற்கும் அறிந்தவர்கள் சொல்லும் நம்பகமான தகவல்களை ஏற்பதற்கும் வித்தியாம் ஒன்றுமில்லை. விண்ணியலைப் பொருத்தவரை நாம் (அதாவது ஒவ்வொருவரும்) நேரடியாக அறிந்தே - கண்டபிறகே அமல்களை செய்ய வேண்டும் என்ற எந்த கட்டளையும் இஸ்லாத்தில் இல்லை. நம்பகமானவர்களால் தீர்மானிக்கப்பட்ட விண்ணியல் - புவியியல் கருத்தோட்டங்களை உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது. நாமும் அந்த நிலையில் தான் இருக்கிறோம். பிறை மாறுபட்ட பகுதிகளில் தோன்றும் என்பது விஞ்ஞான உண்மை. அதைக் காணவும் - தீர்மானிக்கவும் பல நாடுகள் முயல்கின்றன. (கூடுதல் கவனத்தை சவுதி மேற்கொள்கின்றது. - ஹஜ்ஜுக்கு இவர்கள் வழிகாட்ட வேண்டும் என்பதால் இந்த கூடுதல் கவனம்) அவர்கள் அறிவிக்கும் நேரத்தில் முதல் பிறை என்று தீர்மானித்து நம் அமல்களைத் தொடங்கி விட வேண்டியததான்.

பிறை பார்த்தாகிவிட்டது என்று உலகில் எங்கு கூறப்பட்டாலும் அதனை நாம் எடுத்துக்கொள்ள வேண்டியது தானா? ஹபீப்

அமவாசைக்கு அடுத்த பூமியின் எந்தப்பகுதியில் தெரியும் பிறையாக இருந்தாலும் அதுவே அந்த மாதத்திற்கான முதல் பிறையாகும். பூமி அமைப்பில் நேரங்கள் மட்டும் தான் வித்தியாசப்படும். நாள் வித்தியாசப்பட வாய்ப்பே இல்லை என்பதால் தகவல் எங்கிருந்து கிடைத்தாலும் அதை பின்பற்றத்தான் வேண்டும். அதை நாம் புறக்கணித்தால் இதுவரை நாம் எடுத்துக் காட்டியுள்ள (முந்தைய பதிவுகள்) ஆதாரங்களுக்கு மாறுபட்டு நிர்ப்போம்.

அந்ததந்தப் பகுதியில் பிறை தெரியவேண்டும் என்போரின் வாதத்தில் ஏராளமான பலவீனங்கள் கொட்டிக் கிடக்கின்றன. தலைப்பிறைக் குறித்த ஆதாரங்களே போதுமானதாக இருப்பதால் நாம் அந்தப்பகுதிக்கு செல்லவில்லை.

நாம் எடுத்து வைத்துள்ள ஆதாரங்களில் - வாதங்களில் மாற்றுக்கருத்து இருந்தால் எதிர் ஆதாரங்கள் இருந்தால் எழுதுங்கள். இன்னும் கூடுதல் தகவல்களை பரிமாறலாம்

----------------------------------------
ஆனால் நாட்டுக்கு ஒரு பிறை என்ற முறையில் அவர்கள் எடுத்து வைக்கும் வாதம் தான் என்ன.? இதில் இந்தியாவில் டெல்லி, கேரளா ,தமிழ் நாடு என்று மூன்று மாநிலம் கலம் தனி தனி யாக (நோன்பை ) எடுத்த வரலாறும் உண்டு. ஊருக்கு ஒரு பெருநாள் தொழுகை நடந்த நிகழ்ச்சியும் உண்டு. சில ஊர்களில் மூன்றாம் பிறையை முதல் பிறையாக கணித்து நோன்பு நோற்ற சம்பவங்களும் உண்டு.

இதை அரசியல் / கவர்மெண்டு காக அப்படியே ஏற்கிறார் கலா ? (காரணம் இன்று பெருநாள் என்று காலண்டரில் ஒரு வருடத்திற்கு முன்பே விடுமுறை யை அறிவித்து விடுகிறார்கள். அதை ஏன் மாற்ற வேண்டும் என்று கவர்மெண்டு சொல்லுவதால் அதையே அப்படியே அறிவிப்பு செய்து விடுகிறார்களா ?.) இல்லை என்றால், அவர்கள் ஒவ்வரு நாட்டிலும் பிறை பார்க்கும் போதுதான் , அதை வைத்துதான் நோன்பு நோற்க வேண்டும் என்று சொல்லும் அவர்களின் வாதத்தை தங்களால் விளக்க முடியுமா ? மேலும் சிலோன் நாட்டில் பிறை தென்பட்டால் நோன்பு எடுக்கும் இவர்கள் ( தற்போது கேரளாவில் தெரிந்தால் எடுக்க மாட்டார்கள்). சவுதி அரேபியா வில் தென்பட்டு அறி வித்து விட்ட பிறகும் , நோன்பு வைக்க மறுப்பது ஏன்.? சற்றே விபரமாக விளக்கவும். அவர்களின் வாதத்தையும் அறிய ஆவல்.

செய்யத்
----------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.

// உங்களில் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு வைக்கட்டும். என்ற வசன அடிப்படையில் மாதத்தை அடைந்தவர்கள் இரவில் தான் நோன்பு வைக்கப்பட வேண்டும். அதாவது இரவு 6 மணி முதல் நோன்பை துவங்க வேண்டும். ஆனால் யாரும் அப்படி செய்வதில்லை. 6 மணிக்கு பிறை தெரிந்தாலும் அன்று காலை வரை பொருத்திருந்து 5 மணிக்கு தான் முதல் நோன்பின் உள்ளே செல்கிறோம். இந்த இடைப்பட்ட நீண்ட பொழுதின் அர்த்தம் என்ன? என்பதை சற்று சிந்தித்துக் கொண்டு கீழுள்ள குர்ஆன் வசனத்தை அணுகுங்கள் //

6 - 7 மணிக்கு பிறை தெரிந்து அந்த புனிதமிக்க ரமளானை அடைந்தாலும்" ஸஹருடைய நேரத்தை அடைந்து உணவு உண்டு வானம் கருப்பு கோட்டிலிருந்து வெள்ளை கோட்டிற்கு வரும்முன் நோன்பை ஆரம்பிப்பது தானே நபி வழி? அப்படி இருக்க இந்த வாதம் ஏற்புடையதாக இல்லை.
மற்றும்

ஷேய்க் இப்னு உத்தைமீன், ஷேய்க் அல் இஸ்லாம் இப்னு தைமியா போன்ற ஹதீஸ் கலை வல்லுனர்களும் அந்த அந்த நாட்டின் பிறை தெரிவதை வைத்தே நோன்பு நோற்பதும் விடுவதும் ஆகும் என்று கருத்து கூறியுள்ளார்களே ? சகோதரர் தல்பாதர்
http://www.islam-qa.com/en/ref/40720
-----------------------------------
வஅலைக்குமுஸ்ஸலாம்.

முதலில் சகோதரர் தல்பாதர் அவர்களி்ன் பதிவிற்கான விளக்கத்தைப் பார்த்து விட்டு சகோதரர் செய்யத் முன் வைத்துள்ள கேள்விகளுக்கு வருவோம்.

இரவில் நாம் மாதத்தை அடைந்துவிடுகிறோம். 2:185 வது வசனப்படி மாதத்தை அடைந்தவர் நோன்பு வைக்க வேண்டும். மாதத்தை அடைந்தவர் நோன்பு வைக்கட்டும் என்று சொல்லும் ரப்புல் ஆளமீன் அடுத்த வசனத்தில் ' கருப்பு நூலிலிருந்து வெள்ளை நூல் தெளிவாக தெரியும் வரை உண்ணுங்கள் குடியுங்கள்" என்கிறான்.

இப்போது சிந்திக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் மாதத்தை அடைந்த பின்பும் உடனடியாக நோன்பைத் துவக்காமல் ஒரு நீண்ட ஏறத்தாழ 10.30 முதல் 11 மணி நேரம் இடைவெளிக்கு பிறகே முதல் நோன்பின் உள்ளே நுழையும் ஏற்பாட்டை இறைவன் செய்துள்ளான். இறைவன் செய்துள்ள இந்த ஏற்பாட்டின் அர்த்தம் என்னவென்பதே நமது கேள்வி.

பிறைத் தெரிந்தவுடன் நோன்பு துவங்குவது கட்டளையாக இருந்தால் 'சவுதியில் பிறை தெரிந்து அவர்கள் நோன்பைத் துவங்கி விட்டார்கள். நாங்கள் பிறைப் பார்க்காமல் கடந்து விட்டதால் எங்களால் நோன்பை துவக்க முடியாது' என்று கீழ் திசை நாட்டுக்காரர்கள் சொல்வதில் ஒரு அர்த்தம் இருக்கும். ஒரு பகுதியில் பிறைத் தெரிந்த பின்பும் அதிலிருந்து 11 மணிநேரம் கழித்து நோன்பின் உள்ளே செல்லும் ஏற்பாட்டை இறைவன் செய்ததிலிருந்து பிறை தெரிநத பகுதியிலிருந்து அதற்கு கீழ் திசை நாட்டவர்கள் அனைவரும் அந்தப் பிறைக்குள்ளே வந்து விடுவார்கள். அவர்கள் ஸஹர் செய்து நோன்பை துவங்கலாம் என்ற ஹிக்மத் அதில் பொதிந்துள்ளதையே நாம் சுட்டிக்காட்டினோம். இந்த வாதத்துடன் நாம் வைத்துள்ள இதர ஆதாரங்களையும் வாதங்களையும் கவனமாக ஆராயுங்கள்.

ஸாலிஹல் உதைமீன் போன்ற நல்லறிஞர்கள் உட்பட இன்னும் பலரும் அந்தந்தப்பகுதியில் பிறை பார்த்து நோன்பு வைக்கலாம் என்ற கருத்தை முன் வைத்துள்ளார்கள் என்பதை நாமும் அறிவோம். யார் எந்த கருத்தை சொல்லியுள்ளார்கள் என்பது முக்கியமல்ல. எந்த ஆதார அடிப்படையில் சொல்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.

அந்தந்தப்பகுதியில் தான் பிறை பார்க்க வேண்டும் அதுதான் இஸ்லாமிய சட்டம் என்று யாராவது வாதிட்டால் அவர்கள் அதற்கான ஆதாரத்தை முன் வைக்க வேண்டும்.

நாமறிந்தவரை, இது தரப்பு வாதங்களையும் பரிசீலித்த வரை, அந்தந்தப்பகுதியில் பிறைப் பார்க்க வேண்டும் என்பதை விட உலகெங்கும் ஒரே பிறைதான் என்ற வாதமும் அதற்கான ஆதாரங்களுமே தெளிவாகவும், ஏற்புடையதாகவும் உள்ளது. அதையே உங்கள் பார்வைக்கு வைத்து வருகிறோம்.

இனி சகோதரர் செய்யத் அவர்களின் சந்தேகத்தை எடுத்துக் கொள்வோம்.
இந்தியாவில் பிறையை தீர்மானிப்பதில் வருடந்தோரும் ஏற்படும் உள்நாட்டுக் குளறுபடிகளை ஒரு பக்கம் வைத்து விட்டு, அந்தந்தப்பகுதியில் பிறைப் பார்க்க வேண்டும் என்பவர்கள் என்ன வாதங்களை வைக்கிறார்கள் அது ஏற்புடையதாக உள்ளதா.. என்பதை காண்போம்.

அந்தந்தப்பகுதியில் பிறைப்பார்க்க வேண்டும் என்பவர்களின் இரண்டு வாதங்களே முக்கியமானதும் முழுமையானதுமாகும்.

1) உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு வைக்கட்டும் என்ற வசன அடிப்படையில் எல்லோரும் ஒன்றாக மாதத்தை அடைய முடியாது.

2) பிறை பார்த்து நோன்பு வையுங்கள் - பிறைப்பார்த்து நோன்பை விடுங்கள் என்று நபி(ஸல்) கூறியுள்ளதால் நம் பகுதிகளில் நாம் பிறைப் பார்த்துக் கொள்வதே சரி.

இந்த இரண்டு வாதங்கள் தான் அவர்களுடையது. இதில் மாதத்தை அடைதல் என்பதன் அர்த்தம் என்னவென்பதை நாம் முந்தைய பதிவுகளில் விளக்கியுள்ளோம். எல்லோராலும் ஒரே நேரத்தில் அந்த மாதத்தை அடைய முடியாது - ஆனால் ஒரே நாளில் அடைந்து விட முடியும். முதல பிறை என்பது சிறிது நேரத்தில் மறைந்து விடக் கூடியதாகும். ஆனால் முதல் பிறையின் இரவு நீளமானதாகும். ஆம் முதல் பிறையை அறிந்தவர்கள் கூட அந்த இரவின் நீண்ட பொழுதை கழித்த பிறகுதான் நோன்பின் உள்ளே செல்கின்றாகள். எனவே அந்த வசனத்தை வைத்து 'உனக்கொரு பிறை - எனக்கொரு பிறை" என்று வாதிக்க முடியாது. அந்த வாதம் நிற்காது.

பிறைப் பார்த்து நோன்பு வையுங்கள் என்ற நபி(ஸல்) அவர்களின் ஹதீஸும் ஏற்கனவே விளக்கப்பட்டுள்ளது. கண்களால் பார்க்க வேண்டும் என்றக் கட்டளையோ அந்தந்தப்பகுதியில் பார்க்க வேண்டும் என்றக் கட்டளையோ எந்த நபிமொழியிலும் வரவில்லை. மாதப்பிறப்பை அறிந்துக் கொள்ள பிறை அவ்வளவுதான். பிறையின் துவக்கத்தை எப்படி வேண்டுமானாலும் அறியலாம். நபி(ஸல்) காலத்தில் கண்களால் மட்டுமே பார்க்கும் சூழல் இருந்தது. அவர்கள் அப்படிப் பார்த்தார்கள் அவ்வளவுதான். உண்மையில் அவர்கள் பார்த்த பிறை இரண்டாகவோ மூன்றாகவோ கூட இருக்கலாம். ஆனால் அவர்கள் அதை ஒன்று என்றே தீர்மானித்துக் கொள்வார்கள். அன்றைக்கு வேறு வழியில்லை.

ஆனால் இன்றைக்கு இறைவன் அநேக முன்னேற்பாடுகளை செய்துக் கொடுத்துள்ளான். மனிதன் சந்திரனில் குடியேறினால் கூட பூமித் தகவலில் பிறை பிறந்து விட்டதை அறிய முடியும். (சந்திரனில் குடியேறினால் நம் ஊர்காரர்கள் பரங்கிப்பேட்டையில் பிறைத் தெரிகிறதா என்று கேட்பார்களோ..அங்கு பரங்கிப்பேட்டைக்காரருக்கு பக்கத்தில் சென்னைக் காரர் இருந்தால் உங்கள் ஊர் தகவல் என்னைக் கட்டுப்படுத்தாது எனக்கு சென்னையிலிருந்து தகவல் வர வேண்டு்ம் என்று கூறுவாரோ..)

இறைவனின் பெரும் கொடையாக வளர்ந்து நிற்கும் அறிவியலை, அதன் ஆணித்தரமான நிரூபனங்களை கண்டுக் கொள்ளத் தேவையில்லை என்று சொல்லும் அளவிற்கு இஸ்லாம் பிற்போக்கானது அல்ல.

நாம் மேற்சொன்ன இரண்டு வாதங்களைத் தவிர அந்தந்தப்பகுதியில் பிறைப் பார்க்க வேண்டும் என்பவர்களிடம் வேறெந்த வாதமும் இல்லை.
அந்தந்தப்பகுதியில் தான் பிறைப்பார்க்க வேண்டும் என்போர் ஹஜ் செய்வதாக இருந்தால் மட்டும் வரும் தகவலை ஏற்று (உலகெங்கும் ஒரே பிறை என்ற கோட்பாட்டை) ஒப்புக் கொள்கிறார்கள்.

பெருநாள் - அரஃபா - லைலதுல் கதர் என்று அநேக பிரச்சனைகளை உள்ளடக்கியதாக 'அந்தந்தப்பகுதி பிறை" வாதம் பலவீனப்பட்டுப் போய் உள்ளது.

28 நாட்களில் மாதம் முடியும் தெரியுமா..?

அந்தந்தப்பகுதியில் பிறைப்பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்தால் சில நேரம் 28 நாட்களில் மாதத்தை முடித்துக் கொள்ளும் நிலையும் வரும்.
எப்படி? (ஒன்று - .இரண்டு - மூன்று நாட்கள் வித்தியாசத்தில் கூட தமிழகத்தில் பிறை எடுக்கப்படுகின்றது என்பதை கவனத்தில் வைத்துக் கொண்டு தொடருங்கள்.)

ஷஃபானை 30 ஆக பூர்த்தி செய்து சென்னை, ரமளானின் முதல் பிறையை அறிவிக்கின்றது என்று வைத்துக் கொள்வோம். கடலூரிலிருப்பவர்கள் 'எங்களுக்கு மேகமூட்டத்தால் பிறை தெரியவில்லை அதனால் நாங்கள் நாளை முப்பதை பூர்த்தி செய்தே பிறையை எடுப்போம்" என்று கூறி சென்னையின் தகவலை புறக்கணித்து விடுகிறார்கள். இப்போது சென்னை முதல் பிறையில் இருக்கும் போது கடலூர் கடைசி நாளான முப்பதிலும், சென்னை இரண்டாம் நோன்பிலிருக்கும் போது கடலூர் முதல் நோன்பிலும் இருக்கிறார்கள்.

இப்படியே நாட்கள் நகர்ந்து அந்த மாதம் 29ல் முடிந்து சென்னையில் பிறைத் தெரிகின்றது. அதே நாள் எவ்வித மேகமூட்டமுமில்லாமல் கடலூரிலும் பிறைத் தெரிகின்றது என்று வையுங்கள். இப்போ கடலூருக்கு கிடைத்த நோன்புகள் எத்தனை. 28 மட்டுமே.

மாதம் என்பது சிலபோது 30ஆகவும் சிலபோது 29ஆகவும் இருக்கும் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். பிறை மாதங்கள் 28ஆகவோ 31ஆகவோ முடிய வாய்ப்பே இல்லாத நிலையில் வரும் ஆதாரப்பூர்வமான தகவலை புறக்கணித்த கடலூர்வாசிகள் அந்த மாதத்தை 28ல் முடித்து சாதனைப் படைப்பார்கள்.

தனித்தனிப் பிறையில் இத்தகைய முரண்பாடுகள் அநேகம் உள்ளது. (நாம் கூறியுள்ள இந்த உதாரணத்தை ஒன்றுக்கு பலமுறை படியுங்கள். 28ஆக ரமளான் குறைய வாய்ப்புள்ள தனித் தனிப்பிறை பற்றிய சிந்தனை விபரீதமானது என்பது புரியும்.

இதுவரை வந்துள்ள பதிவுகள் அனைத்தையும் வரிசையாக படித்து விட்டு தனிப்பிறையா - ஒரேப் பிறையா என்பதை முடிவு செய்யுங்கள் ( நேர்வழிக்காட்ட அல்லாஹ் போதுமானவன்)

ஹதீஸ்கலை சுருக்கம்

இஸ்லாமியப் பிரச்சாரம் தீவிரமடையத் துவங்கிய காலத்திலிருந்து குர்ஆனும், ஹதீஸ்களுமே இஸ்லாத்தின் மூல ஆதாரம் என்று மக்களிடம் வைக்கும் போது நபிமொழிகளில் பலவீனமும் உண்டா? இது என்ன கொள்கை என்று பலர் குரல் எழுப்பியுள்ளனர். பலர் நம்மை கேலியும் கிண்டலும் செய்தனர். எதை கண்டும் துவளாமல் ஏராளமான தூய இஸ்லாமிய சிந்தனைவாதிகள் உருவாகி களத்தில் நிற்கும் வேளையில் அவர்களுக்குப் பயன்படும் நோக்கில் சுருக்கமாக பலவீனமான ஹதீஸ்கள் உருவாவது எப்படி? என்று தெரிந்து கொள்ள இக்கட்டுரை வெளியிடப்படுகிறது.

ஹதீஸ் கலை என்பது ஆழ்ந்த, அகன்ற அறிவுத்திறன் கொண்டதாகும். ஒரு சில பக்கங்களில் முடியக்கூடிய விஷயமல்ல அது. இருப்பினும் புரிந்து கொள்வதற்கு ஏற்ற அடிப்படை விஷயம் இதுதான்.

1. ஒரு ஹதீஸை நபித்தோழர்கள் நேரடியாக அறிவிக்காமல் அதற்கு அடுத்தத் தலைமுறையினர் (தாபிஈ) நேரடியாக அறிவித்தால், அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் பார்த்துப் பழகும் வாய்ப்பில்லை என்பதால் அத்தகைய ஹதீஸ்கள் பலவீனமாகி விடும்.

2. அறிவிப்பாளர்களுக்கு மத்தியில் தொடர்பின்மை இருந்தால் அவைகளும் பலவீனமாகும்.

3. நபித்தோழர் ஒரு ஹதீஸை அறிவித்து அதன்பிறகு வரும் அறிவிப்பாளர்களிடையே தொடர் விடுபட்டிருந்தால் அதுவும் தொடர் அறுந்த பலவீனமான ஹதீஸாகும்.

4. எனக்கு இவர் இந்த ஹதீஸை அறிவித்தார் என்று ஒரு அறிவிப்பாளர் கூறும் போது அவர்கள் இருவரும் சமகாலத்தில் வாழ்ந்தவராகவும் இருவரும் நேரடியாக சந்திக்கும் வாய்ப்பை பெற்றவராகவும் இருக்க வேண்டும். அதில் ஏதாவது குறை இருந்தால் அதுவும் பலவீனமாகும்.

5. நபித்தோழர்களைத் தவிர்த்து இதர அறிவிப்பாளர்களில் எவராவது பொய்யர் என்று பரவலாக இனங்காட்டப்பட்டால் அதுவும் பலவீனமாகும்.

6. மார்க்கத்திற்கு முரணான பித்அத் போன்ற காரியங்களைச் செய்யக் கூடியவர்கள் அவர்களது செயல்களை நியாயப்படுத்தி ஹதீஸ்கள் அறிவித்தால் அதுவும் பலவீனமாகும்.

7. ஒரு அறிவிப்பாளர் இளமையில் நல்ல ஞாபக சக்தியுடன் இருந்து பிற்காலத்தில் ஞாபக சக்தியில் தடுமாற்றம் ஏற்பட்டால், தடுமாற்றம் ஏற்பட்ட பின்பு அறிவித்தவை பலவீனமாகும். அவருக்கு எப்போது தடுமாற்றம் ஏற்பட்டது என்ற தகவல் தெரியாவிட்டால் அவர் அறிவித்த முழு செய்திகளும் பலவீனமாகும்.

8. ஒரு செய்தியை அறிவிக்கும் போது ஒருமுறை ஒருவர் பெயரையும் அடுத்த முறை அறிவிக்கும் போது பெயரை மாற்றியும் அறிவித்தால் தடுமாற்றத்தின் காரணத்தால் அதுவும் பலவீனமாகும்.

9. மொழி, இனம், பாரம்பரியம,; மார்க்கத்தில் பிரிவினை இவைகளை அனுமதித்து அல்லது புகழ்ந்து அறிவிக்கப்படும் அறிவிப்புகள் மொத்தமாக குர்ஆனுக்கு முரண்படுவதால் அவைகளும் பலவீனமாகும்.

10. ஹதீஸ் கலை வல்லுனர்கள் அனைவர்களிடமும் அறிமுகமில்லாத, தகவல் கிடைக்காத ஆட்கள் மூலம் ஒரு செய்தி வந்தால் அதுவும் பலவீனமாகும்.

11. தந்தை வழியாக மகன் அறிவிக்கும் செய்தியில் மகனுடைய சிறு வயதிலேயே தந்தை இறந்திருந்தால், தந்தையிடமிருந்து செவியுறும் வாய்ப்பை இழந்திருந்தால் அதுவும் பலவீனம்.

12. ஒரு தந்தைக்கு பல மகன்கள் இருந்து மகன்களுடைய பெயர் குறிப்பிடாமல் இன்னாரின் மகன் அறிவித்தார் என்று கூறினால் அதுவும் பலவீனமாகும்.

13. இறைவன் கருணையாளன் என்பதால் எத்தகைய பொய்யும் பேசலாம்,
தவறில்லை என்ற கொள்கை வாதிகள் அறிவிக்கும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமாகும்.

இப்படி ஏராளமான மொழிகளில் ஹதீஸ்கள் தரம் பிரிக்கப்படுகின்றன. لاَ تَقْفُ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ
சந்தேகமானவற்றை பின்பற்ற வேண்டாம் (அல் குர்ஆன் 17:36). என்ற இறை கட்டளைக்கிணங்க, சந்தேகம் ஏற்படும் எல்லா செய்திகளையும் ஹதீஸ் கலை மேதைகள் ஒதுக்கி தள்ளிவிட்டார்கள்

குறிப்பு 1: இக்கட்டுரை தஹ்தீப், தர்கீப், தல்கீஸ், மீஸூன், தத்ரீப் இன்னும் பல ஹதீஸ் நூல்களைத் தழுவி எழுதப்பட்டது.

குறிப்பு 2: குர்ஆனுடன் எந்த வகையிலும் ஒத்துப் போகாத - முரண்பட்டே நிற்கும் ஹதீஸ்கள் ஏதாவது இருந்தால் அப்போது நாம் குர்ஆனுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஹதீஸ்கள் விஷயத்தில் மெளனம் காத்து விட வேண்டும்.  ஹதீஸ்கள் முக்கியம் என்று குர்ஆனை அலட்சியப்படுத்தி விடக் கூடாது.

நபித் திருமணம் நாகரீகம் மீறலா?

கிறித்தவ நண்பர் ஒருவர் நபி(ஸல்) அவர்களின் திருமணங்களைப் பற்றி கீழ் கண்ட வினாக்களை எழுப்புகிறார்;.

இறைத்தூதர் மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும் போது ஒன்று - இரண்டு திருமணங்கள் மட்டும் செய்திருக்கலாம். 11 திருமணங்கள் முடித்ததால் அதையே காரணங்காட்டி அரபுகள் 3 - 4 திருமணம் முடித்து அநீதம் இழைக்கிறார்கள் என்கிறார்.

இறைத்தூதர் தம்மை விட வயது முதிர்ந்த பெண்களை திருமணம் முடிக்கக் காரணம் என்ன? என்றும் கேட்கிறார் இது பற்றி தெளிவான விளக்கம் வேண்டும்  முபாரக் அலி - யாஹூ மெயில் வழியாக.

அரபுகளும் சரி உலகின் இதர பகுதிகளில் வாழும் முஸ்லிம்களில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களும் சரி இவர்களெல்லாம் திருமணத்தின் மூலம் ஒரே நேரத்தில் 3 - 4 மனைவிகளை சொந்தமாக்கிக் கொள்வதற்கு காரணம் இறைத் தூதர் பலதாரமணம் புரிந்துள்ளார் என்பதனால் அல்ல மாறாக ஒரே நேரத்தில் நான்கு பெண்கள் வரை ஒருவனுக்கு மனைவியாக இருக்கலாம் என்ற இறைவனின் அனுமதிதான் இதற்கு காரணமாகும்.

فَانكِحُواْ مَا طَابَ لَكُم مِّنَ النِّسَاء مَثْنَى وَثُلاَثَ وَرُبَاعَ فَإِنْ خِفْتُمْ أَلاَّ تَعْدِلُواْ فَوَاحِدَةً

'....பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களை இரண்டிரண்டாகவோ - மும்மூன்றாகவே - நான்கு நான்காகவோ நீங்கள் திருமணம் செய்துக் கொள்ளுங்கள் அவர்களுக்கிடையில் நீதமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே போதுமாக்கிக் கொள்ளுங்கள்....' (அல் குர்ஆன் 4:3)

அரபுகள் உட்பட முஸ்லிம்களில் வசதிவாய்ப்புள்ளோர் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் செய்வதற்கு இந்த வசனம்தான் காரணமாகும்.

இந்த வசனம் நபி(ஸல்) அவர்களின் 52ம் வயதின் இறுதிப் பகுதியில் இறங்கியது என்று விளங்க முடிகிறது. இந்த வசனம் இறங்கும் போது இறைத் தூதர் அவர்களுக்கு மூன்று திருமணங்களே முடிந்திருந்தன. அதில் முதல் மனைவி இறந்துப் போக இரண்டு மனைவிகளே உயிரோடு இருந்தனர். இறைத்தூதர் பத்துக்கும் மேற்பட்ட திருமணங்களை செய்ததால் தான் முஸ்லிம்கள் பலதாரமணம் செய்கிறார்கள் என்று அந்த கிறித்துவ சகோதரர் விளங்கி இருப்பது தவறு என்பதை இப்போது புரிந்திருப்பீர்கள். இறைத்தூதர் இரண்டு மனைவிகளோடு இருந்தபோதே முஸ்லிம்கள் அதிகப்பட்சமாக நான்கு திருமணம் செய்துக் கொள்ளலாம் என்ற அனுமதி இறைவன் புறத்திலிருந்து கிடைத்து விட்டது.

நான்கு திருமணங்கள் செய்பவர்கள் பெண்களுக்கு அநீதி இழைக்கிறார்கள் என்ற வாதமும் தவறு. ஒரு மனைவியோடு வாழ்பவர்கள் தங்கள் மனைவிகளுக்கு அநீதியே இழைப்பதில்லை என்று யாராவது சான்றிதழ் கொடுக்க முடியுமா... அநீதி இழைத்தல் என்பது  ஆண்களின் மன நிலையைப் பொருத்ததாகும். ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் செய்து பல மனைவியரோடு அவர்களுக்கு மத்தியில் பேதம் பாராட்டாமல் - பாராபட்சம் காட்டாமல் -  சமமாக நடக்கும் ஆண்களும் இருக்கிறார்கள். சமூகத்திற்கோ - சட்டத்திற்கோ பயந்து ஒரு திருமணம் செய்து மனைவி வீட்டில் இருக்கும் போது அன்னிய பெண்கள் மீது கையை வைக்கும் கெடுமதியாளர்களும் ஆண்களில் இருக்கத்தான் செய்கிறார்கள். (பலதாமணம் பெண்களுக்கு அநீதி இழைக்கக் கூடியதா... என்ற விவாதத்திற்கு உள்ளே நாம் செல்லவில்லை காரணம் கேள்வி அதுபற்றியதல்ல)

பலதாரமணத்தில் மட்டும் அநீதி இருக்கிறது என்று கூறுவது ஆண்களின் மனநிலையைப் புரிந்துக் கொள்ளாதவர்களின் வாதமாகத்தான் இருக்க முடியும்.

இறைத்தூதர் தம்மை விட வயது முதிர்ந்தப் பெண்களைத் திருமணம் செய்ததற்குரிய காரணங்களை விளங்க வேண்டுமானால் அந்த திருமணங்களின் பின்னணியை நாம் விளங்க வேண்டும். அது விரிவாக விளக்கப்பட வேண்டிய வரலாறாகும்.

சுருக்கமாக புரிந்துக் கொள்ள வேண்டுமானால்,

முதிர்ந்த வயது என்பது சமூகத்தில் பிறரால் புறக்கணிக்கப்பட்டு அவலங்களை சந்திக்கக் கூடிய - பிறரது அன்பையும், ஆதரவையும், அரவணைப்பையும் மனம் விரும்பக் கூடிய ஒரு வயதாகும். இறைத் தூதர் வயது முதிர்ந்தப் பெண்களை திருமணம் செய்ய முன் வந்ததும் அந்தப் பெண்கள் மறுக்காமல் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததும் இந்த பின்னணியைக் கொண்டதாகும் இது முதல் காரணம். ஆதரவற்றவர்களுக்கு ஆதரவளிப்பது ஆட்சியாளரின் கடமையாகும் என்பதை மிக அழுத்தமாக உலகில் உரைத்து அதை செயலாக்கப்படுத்திக் காட்டியவர்கள் முஹம்மத்(ஸல்) அவர்கள். அன்னியப் பெண்ணாக வைத்து ஆதரவு அளிப்பதை விட சொந்த மனைவியாக்கிக் கொண்டு ஆதரவளித்தால் அந்தப் பெண்களால் கூடுதல் பலன் பெற முடியும் என்பதால் மனைவி என்ற அந்தஸ்து வழங்கப்பட்டது.

இதர ஆட்சியாளர்கள் இதே வழியைப் பின்பற்றலாமா என்றால் அனுமதிக்க முடியாது. ஏனெனில் முஹம்மத்(ஸல்) அவர்கள் வெறும் ஆட்சியாளராக இருந்து மட்டும் இந்த திருமணங்களை செய்யவில்லை. இறைவனின் தூதராக இருந்தும் செய்தார்கள். தம் செயல்களுக்கு நாளை இறைவனிடம் பதில் சொல்ல வேண்டும் என்ற அவர்களின் உள்ளச்சத்தை உலகில் எந்த ஆட்சியாளரின் உள்ளச்சத்தோடும் ஒப்பிட்டுப் பார்க்கவே முடியாது. இந்த அளவுகோள் தான் இத்துனை மனைவிகளுக்கு மத்தியிலும் அவர்களை நீதமாக நடக்கச் செய்தது.

எல்லா வீடுகளிலும் நடக்கும் சக்களத்தி சண்டை இறைத் தூதரின் வீட்டிலும் நடந்ததுதான். அதற்கு கூட 'உன்னை விட நான்தான் அவர்களை அதிகமாக கவனிப்பேன்... உன்னை விட நான் தான் அவர்களை அதிகமாக கவனிப்பேன்... என்ற உபசரிப்பு போட்டி மனப் பான்மையில் நடந்ததாகும். அந்த மனைவிகளின் வீட்டில் பல சந்தர்பங்களில் வறுமை கவ்வி கிடந்த போதும் கூட அவர்கள் தங்கள் கணவரை போட்டிப் போட்டுக் கொண்டு நேசித்ததற்கு நீதி வழுவா அவர்களுடைய வாழ்க்கை முறையே காரணமாகும்.

அந்த இறைத்தூதருக்கு பிறகு வந்த எந்த ஆட்சியாளருக்கும் (அவர்களுடைய அன்புத் தோழர்கள் உட்பட) அவர்களுடைய பண்பு இருக்கவில்லை - இருக்க முடியாது என்பதால் அவர்களைப் போன்று மனைவிகளின் எண்ணிக்கையை - ஆதரவு அளிக்க வேண்டிய சூழ்நிலை வந்தாலும் - கொடுக்க முடியாது.

அவர்கள் பல திருமணங்கள் செய்ய வேண்டியதற்கு இன்னொரு முக்கியமான - அவசியமான காரணமும் இருந்தது.

அவர்கள் இறைவன் புறத்திலிருந்து வந்த இறுதி தூதராக இருந்ததால் அவர்களின் மொத்த வாழ்க்கையையும் ஒளிவு மறைவு இல்லாமல் மொத்த உலகுக்கும் சொல்ல வேண்டிய நிலை உருவானது. வெளி உலக வாழ்க்கையை அறிவிப்பதற்கு ஆயிரக்கணக்கான தோழர்கள் (தோழிகளும் அடங்குவர்) இருந்தனர். சரிபாதி வாழ்க்கையை வெளி உலகில் கழிக்கும் மனிதன் மீதி பாதி வாழ்க்கையை வீட்டில் தான் கழிக்க வேண்டும். இறைத் தூதரின் நிலையும் இதுதான்.

வெளி உலகத்தில் அவர்கள் வாழ்ந்த பாதி வாழ்க்கையை அறிவிக்க ஆயிரக்கணக்கான மக்கள் இருந்த போது மறுபாதி வாழ்க்கையை அறிவிப்பதற்கு ஒருவரோ - இருவரோ போதியவர்களாக இருக்க முடியாது. இதை ஈடு செய்வதற்காகவும் இவர்கள் நான்குக்கு மேற்பட்ட திருமணங்கள் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

காலையில் எழுந்தது தொடங்கி இரவில் இல்லறத்தில் ஈடுபட்டு ஓய்வெடுக்கும் வரையிலான அனைத்து வழிமுறையையும் அவர்களின் மனைவிகள் மூலமே இவ்வுலகிற்கு கிடைத்துள்ளது. வெளி உலக வாழ்க்கையின் அறிவிப்பாளர்களுடன் ஒப்பிடும் போது இந்த மனைவிகளின் எண்ணிக்கை மிக மிக சொற்பமே... இன்னும் கூட அவர்களுக்கு மனைவிகள் தேவைப்பட்டிருக்கும் என்று நம் மனங்கள் நியாயம் கற்பித்தாலும் 'இதற்கு மேல் வேறு திருமணங்கள் செய்யக் கூடாது' என்று இறைவன் தடுத்து விட்டான். (பார்க்க அல் குர்ஆன் 33:52)

لَا يَحِلُّ لَكَ النِّسَاء مِن بَعْدُ وَلَا أَن تَبَدَّلَ بِهِنَّ مِنْ أَزْوَاجٍ وَلَوْ أَعْجَبَكَ حُسْنُهُنَّ إِلَّا مَا مَلَكَتْ يَمِينُكَ وَكَانَ اللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ رَّقِيبًا

வயது முதிர்ந்தவர்கள் உட்பட நபி(ஸல்) பல திருமணங்கள் செய்ததற்கு இது போன்ற நியாயமான காரணங்கள் இருந்தன.

அரபுமொழி பற்று தவறா?

கேள்வி - அல்லாஹ் குர்ஆனில் சிந்தித்து உணரும்படி வலியுறுத்துகிறான். அவ்வகையில், குர்ஆன் அருளப்பட்டது அரபி மொழியில், அதன் வசனங்களை நமது ஐவேளை தொழுகைகளில் அன்றாடம் அதே அரபி மொழியில்தான் ஓதி வருகிறோம். ஆனால் உலகில் உள்ள முஸ்லிம்களில் 70 சதவிகிதம் பேர் அரபியை தாய்மொழியாக கொண்டவர்கள் அல்ல. இவர்கள் குர்ஆனுடைய விளக்கங்களை தங்களது மொழிபெயர்ப்புகளிலிருந்துதான் விளங்கிக் கொள்கின்றனர். அப்படி இருக்க பொருள் உணர்ந்து அல்லாஹ்வை பிரார்த்திக்க வேண்டிய தருணமான தொழுகையில் அரபியில்தான் ஓத வேண்டும் என்று நிர்ப்பந்திப்பது ஏதோ அரபு மொழிப்பற்றை வளர்ப்பதற்காக செய்யப்படுகின்ற ஒரு காரியமாகவே தெரிகிறது. இந்த விஷயத்தை விளக்கவும்.

உங்களைப் போன்றே பலரும் சிந்திக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் இதில் சில முக்கியமான விஷயங்களை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

தொழுகையில் அரபியில் ஓதுவதற்கான காரணங்கள்.

1 - எது இறை வணக்கம் என்று இறைத்தூதரால் காட்டிக் கொடுக்கப்பட்டதோ அதை மொழிமாற்றம் செய்யவோ அல்லது அதே மொழியில் வேறு சொற்களைப் பயன்படுத்திக் கொள்ளவோ இறைத்தூதர் அனுமதிக்கவில்லை என்பது முதலாவது காரணம்.

முஹம்மத்(ஸல்) அவர்கள் ஒரு தோழருக்கு இரவில் பிரார்த்திப்பதற்காக ஒரு பிரார்த்தனையைக் கற்றுக் கொடுக்கிறார்கள். அதில் 'வநபிய்யிக அல்லதி அர்ஸல்த' (உன்னால் அனுப்பப்பட்ட நபியையும் (நம்புகிறேன்) என்ற வார்த்தையைக் கற்றுக் கொடுக்கிறார்கள். அந்த நபித்தோழர் அந்தப் பிரார்த்தனையை மனனம் செய்துக் கொண்டு வந்து இறைத் தூதரிடம் ஒப்புவித்து சரிபார்க்கிறார். அப்போது 'வநபிய்யிக அல்லதி அர்ஸல்த' என்று இறைத்தூதர் கற்றுக் கொடுத்த அந்த வார்த்தையை மாற்றி 'வரஸூலிக அல்லதி அர்ஸல்த' என்று மனனம் செய்து வந்தார்.

'நபிய்யிக' 'ரஸூலிக்க' ஒரேயொரு பதம் மாறுகிறது. ஆனால் இரண்டுக்கும் அர்த்தம் ஒன்றுதான். 'நபிய்யிக' 'உனது நபியை' - 'ரஸூலிக்க' 'உனது தூதரை'. நபியாகவும் - ரஸூலாகவும் முஹம்மத்(ஸல்) இருக்கும் போதும் 'நபிய்யிக' என்றுக் கற்றுக் கொடுத்ததை 'ரஸூலிக்க' என்று மாற்றிக் கொண்டு வந்ததை முஹம்மத்(ஸல்) அவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. 'நான் கற்றுக் கொடுத்தது போன்று 'நபிய்யிக' என்றே சொல்' என்று திருத்தம் செய்கிறார்கள். (இந்த சம்பவம் புகாரியின் ஆரம்பத்திலேயே இடம் பெறுகிறது)

நபி - ரஸூல் இரண்டும் ஒரே அர்த்தத்தைக் கொடுக்கக் கூடியதாக இருந்தும், ஒரே மொழியில் ஒரே அர்த்தத்தைக் கொடுக்கக் கூடியதாக இருந்தும் கூட முஹம்மத் (ஸல்) அவர்கள் வாயிலிருந்து வெளிப்பட்ட வார்த்தைகளில் எத்தகைய மாற்றமும் செய்யக் கூடாது என்று அவர்கள் விளக்கியுள்ளதால் 'அவர்கள் எதையெல்லாம் வணக்கமாக - பிரார்த்தனைகளாக சொல்லிக் கொடுத்தார்களோ அவற்றில் எத்தகைய மாற்றமும் செய்யக் கூடாது.

தொழுகை என்பது இறை வணக்கமாகும். அதில் இறைத்தூதர் அரபியில் தான் ஓதியுள்ளார்கள். அரபியில் தான் ஓத வேண்டும் என்று விரும்பியுள்ளார்கள் என்பதால் அரபியில் ஓதுவது தான் சரியாகும். இதை அரபி மொழிப் பற்று என்பதை விட இறைத்தூதர் மீதான விசுவாசமும் அவர்களை முழுவதுமாகப் பின்பற்றுவதற்கான அடையாளமுமாகும் என்பதே சரியாகும். ஒருவேளை முஹம்மத் (ஸல்) அவர்கள் அரபியல்லாத வேற்று மொழியில் வந்திருந்தால் அப்போது யாரும் அரபி மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டோம். அவர்கள் எந்த மொழியில் வந்தார்களோ அந்த மொழியில் தான் வணக்கங்கள் நடக்கும். இதிலிருந்து மொழியை விட இறைத்தூதருக்கு தான் முக்கியத்துவம் என்பதை விளங்குவீர்கள்.

அரபி மொழிப் பற்று தவறா..

அரபு மொழியின் மீதான விசுவாசமே அவ்வாறு செய்ய சொல்கிறது அல்லது செய்யும் படி தூண்டப்படுகிறது என்றே வைத்துக் கொண்டாலும் அதுவும் அவசியம் தான் என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு மொழி எந்த அளவிற்கு மக்களிடம் புழக்கத்திலிருக்கிறதோ அந்த அளவிற்கு அது நீண்ட ஆயுளைப் பெறும். தமிழ் என்ற மொழி பேச்சு வழக்கிலாவது இருப்பதால் தான் அதனால் இரண்டாயிரம் வருடங்களாக தாக்குபிடிக்க முடிகிறது. ஆனால் சமஸ்கிரத மொழியின் நிலை என்ன? வேதங்கள் அந்த மொழியில் இருந்தும் அது நடைமுறைப் படுத்தப்படாமலாகி விட்டதால் மக்களிடமிருந்து அந்த மொழி விடைப் பெற்றுக் கொண்டதோடு வேதங்களின் கருத்துக்களும் முடக்கப்பட்டு விட்டன.

குர்ஆன் என்பது இறைவனால் இறக்கியருளப்பட்ட இறுதி வேதமாகும். இதற்கு முன் வெளிபட்ட தவ்ராத் - இன்ஜில் போன்ற (இன்றைக்கு கிறிஸ்த்துவர்கள் வைத்திருக்கும் பழைய - புதிய ஏற்பாடுகளுக்கும் நபிமார்களுக்கு இறக்கப்பட்ட தவ்ராத் - இன்ஜில் ஆகியவற்றிற்கும் எத்தகைய சம்பந்தமுமில்லை) வேதங்கள் காலாவதியாகி மக்களிடமிருந்து மறைந்துப் போனதற்கு அந்த வேதங்கள் இறங்கிய மொழிகளும் காரணமாகும். படிப்படியாக அந்த மொழிகள் வழக்கொழிந்துப் போனதால் அவற்றோடு வேதங்களும் சென்று விட்டன. குர்ஆன் என்பது இறுதி நாள் வரை நீடிக்க வேண்டிய ஒரு வழிகாட்டி என்பதால் அது இறங்கிய மொழியான அரபு மொழி பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அக்கறை ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இருக்க வேண்டும்.  அதை பாதுகாக்கும் வழிகளில் ஒன்று தான் தொழுகையில் அது இறங்கிய அதே வடிவில் அதே மொழியில் ஓதுவதாகும். அந்த வகையில் அரபு மொழிப் பற்று அவசியமாகின்றது.

இன்னும் கூடுதல் பற்று வேண்டும்.

ஆங்கிலம் மிக சமீபத்திய மொழியாகும். அது இன்றைய உலகை ஆளுமைப் புரிவதற்கு காரணங்கள் இரண்டு.

அந்த மொழியைப் பரப்புவதற்காக அந்த மொழிப் பேசக் கூடிய நாட்டவர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் எடுத்துக் கொண்ட முயற்சி. அதற்கான அயராத உழைப்பு. அந்த முயற்சியும் உழைப்பும் தான் 'செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்துப் பாயுது காதினிலே' என்று மொழிப் பெருமைப் பேசும் நம் மாநிலத்தில் பிறக்கும் குழந்தைகள் 'அம்மா அப்பா' என்று கற்றுக் கொள்வதற்கு முன் 'மாம் - டாட்' என்பதை சொல்லி சந்தோஷப்படுகிறது. மொழி நாகரீகம் என்பதே ஆங்கிலம் தான். ஆங்கிலம் தெரியாதவன் நாகரீகக் குறைவு உடையவன்தான் என்ற மனநிலை உலகெங்கும் வியாபித்துப் போய்விட்டது. எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு விரிந்துப் போயுள்ள மனித அறிவின் எல்லைகள் அனைத்தும் ஆங்கில மொழியின் உள்ளே தான் புதைந்துக் கிடக்கின்றன. எந்த நாட்டு எழுத்தாளராக இருந்தாலும் அவரது ஆக்கம் உலக அளவில் போக வேண்டும் என்றால் அது ஆங்கிலத்தில் இருந்தாக வேண்டும். புகழ் பெற்ற இந்திய எழுத்தாளர் அருந்ததி ராய் தனது படைப்புகளை இந்திய மொழிகளில் கொடுத்திருந்தால் இத்துனை சீக்கிரம் அவருக்கு 'புக்கர்' விருது கிடைத்திருக்குமா..?

     ஒருவன் ஆங்கிலம் பேசும் போது 'இவனுக்கு ஆங்கிலப் பற்று, ஆங்கில வெறி' என்றெல்லாம் சொல்ல முடியாத அளவிற்கு அந்த மொழி உலகின் இயல்பான வாழ்க்கைத் தரத்தைப் பெற்று விட்டது.

ஆங்கிலம் தன்னை வளப்படுத்திக் கொள்வதற்கு எத்தகையக் காரியத்தையும் செய்யத் தயங்குவதேக் கிடையாது. அதாவது பிற மொழி வார்த்தைகளை தன்னோடு இணைத்துக் கொண்டு தன் பெயரை அதற்கு சூட்டிவிடுவதற்கு ஆங்கிலம் என்றைக்கும் வெட்கப்படுவதேக் கிடையாது. இன்றைக்கு மக்களிடம் புழக்கத்திலிருக்கும் அனேக ஆங்கில வார்த்தைகள் உண்மையில் அந்த மொழியின் வார்த்தைகளல்ல. பிற மொழிகளிலுள்ளவற்றை ஐக்கியப் படுத்திக் கொண்டதுதான்.

எந்த அளவிற்கு ஆங்கிலம் உலகை ஆதிக்கம் புரிகிறதோ அதை விட அதிகமாக இன்னும் முன்னேயே அரபி மொழி உலகை ஆதிக்கம் புரிந்திருக்க வேண்டும். காரணம் ஆங்கிலம் வெறும் மொழியாக மட்டுமே இருப்பது போன்று அரபு வெறும் மொழி மட்டுமல்ல அந்த மொழியில் மிகத் தெளிவான அர்த்தமுள்ள வாழ்க்கையொன்று புதைந்துக் கிடக்கின்றது.

குர்ஆன் வெளிப்பட்ட நாள் முதல் அதற்கு நிகராக உலகில் ஒரு வேதம் இல்லை. வருவதற்கும் வாய்ப்பில்லை என்றெல்லாம் பெருமைப்பட்டுக்கொள்ளும் முஸ்லிம்களில் போதிய அளவு செல்வமும் நிறைந்த வாழ்க்கைத் தரமும் அதிகப்படியான நிலப்பரப்புகளையும் கொண்டவர்கள் அரபிகள். இருந்தும் அவர்களால் அரபியை ஓர் உலக மொழியாக ஆக்க முடியவில்லை. முடியவில்லை என்பதை விட முயற்சிக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். இன்றைக்கும் நிலவரம் இதுதான். ஒரு ஐம்பது வருடங்களுக்கு முன்பாவது இம் முயற்சியில் அவர்கள் இறங்கி இருந்தால் இன்றைக்கு நீங்களும் நாமும் அரபி மொழியை முழுமையாக கற்றுக் கொண்டிருப்போம். அந்த மொழி நம்மிடையே பேச்சு வழக்கு மொழியாகி - தாய் மொழியின் இயல்பைப் பெற்றிருக்கும். அரபு மொழி ஆரம்பப் பள்ளியிலிருந்து மேற்படிப்பு வரை பாட திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்தால் இந்தியா போன்ற நாடுகளில் அரபு மதரஸாக்களுக்கு வேலையில்லாமல் போயிருக்கும்.

அரபு, மத மொழியாக்கப்பட்டுள்ளது.

எந்த ஒரு மொழிக்கும் மத சாயம் பூசுவது முட்டாள்தனமானது என்பதை அறிவாளிகள் உலகில் முழங்கிக் கொண்டே இருக்கிறார்கள். எந்த மதத்திற்கும் எந்த மொழியும் சொந்தமில்லாத நிலையிலும் அரபு மொழிக்கும் - உருது மொழிக்கும் மத சாயம் பூசும் நிலை உருவாகி விட்டது. (உருது பற்றி நாம் இங்கு விவாதிக்க வேண்டாம்).

அரபி, பள்ளிப் பாடத்திட்டங்களில் இல்லாததால் அந்த மொழியை போதிப்பதற்கும் அந்த மொழியில் உள்ள இஸ்லாமிய கருத்துக்களை போதிப்பதற்கும் இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் அரபு மதரஸாக்கள் துவங்கப்பட்டன. தேசிய ஒருங்கிணைப்பு - நல்லக் கல்வித்திட்டம் - எதிர்கால வளர்ச்சி - போதிக்கும் முறைகளில் சீர்திருத்தம் என்று எது ஒன்றுமே அரபு மதரஸாக்களில் இல்லாததால் அவை மக்களிடம் எடுபடாமல் போய் விட்டன. (பாட திட்டங்களிலும் போதிக்கும் முறைகளிலும் மிகப் பெரிய அளவிலான சீர்திருத்தங்கள் வேண்டும் என்று கல்வியாளர்கள் உரத்து சொல்லிக் கொண்டிருந்தாலும் பழமை வாதிகளில் காதுகளில் அவை விழுவதேயில்லை).

அரபு ஒரு மதத்தின் மொழி என்ற நிலையைப் பெற்று விட்டதால் தான் அதில் உள்ள வார்த்தையைக் கூட மற்றவர்கள் தங்கள் வாய்களால் உச்சரிக்க மறுக்கிறார்கள். தமிழில் உள்ள 'வணக்கம்' என்ற வார்த்தையையும், சமஸ்கிரதத்திலுள்ள 'நமஸ்காரம்' என்ற வார்த்தையையும், ஆங்கிலத்திலுள்ள 'குட்மார்னிங்' என்ற வார்த்தையும் மரியாதைக்குரிய - வாழ்த்துக்குரிய வார்த்தைகளாக பார்ப்பவர்கள், அங்கீகரிப்பவர்கள் அரபு மொழியிலுள்ள 'அஸ்ஸலாமு அலைக்கும்' (உங்களுக்கு சாந்தி நிலவட்டும்) என்ற வாழ்த்து வார்த்தையை மட்டும் வாழ்த்தாக பார்க்காமல் ஒரு மத வார்த்தைப் போன்று, மத திணிப்புப் போன்று பார்க்கிறார்கள். அரபு நாடுகளில் வந்து பணம் சம்பாதித்து நல்ல நிலையிலிருக்கும் அன்னிய நாட்டு பிற மதத்தவர்களில் சிலர் திட்டமிட்டே அஸ்ஸலாமு அலைக்கும் போன்ற பொதுவான வார்த்தைகளை புறக்கணிப்பதை சர்வ சாதாரணமாகப் பார்க்கலாம்.

அரட்டை அரங்கத்தில் ஒரு முஸ்லிம் சலாத்தின் வழியாக 'விசு'விற்கு வாழ்த்து சொல்லும் போது விசுக்கென்று அவர் அதை மறுத்த விதத்தை நாம் மறக்க முடியாது. காரணம் அதை ஒரு மத வாழ்த்தாக அவர் நினைத்துக் கொண்டிருப்பதுதான்.

இந் நிலைக்கு உள்ள காரணங்கள் அனைத்தும் களையப்பட வேண்டும். அதை ஒரு மொழியாக மட்டுமே உலகம் பார்க்க வேண்டுமானால் தொழுகைப் போன்ற வணக்கங்களில் மட்டுமின்றி பொதுவாழ்க்கையிலும் அரபு நடைமுறைப் படுத்தப்பட வேண்டும். இது நம்மைப் பொருத்தவரை மிகக் கடினமான பணிதான் என்றாலும் அந்த சிந்தனையையாவது மக்களிடம் கொண்டு செல்வோம்.

நம் தேவைகளை இறைவனிடம் முறையிடும் போது நமக்கு தெரிந்த எந்த மொழியிலும் பிரார்த்தித்துக் கொள்ளலாம் அதற்கு தடையொன்றும் இல்லை.

கர்பலா ஒரு அரசியல் நிகழ்வே!

முஸ்லிம் உம்மத்தில் நடந்த வரலாற்று சோகங்களில் ஒன்று கர்பலா என்ற இடத்தில் முஸ்லிம்களுக்கு மத்தியில் நடந்த போர்.  இந்த போர் மற்றும் போரின் விளைவு குறித்து அன்றிலிருந்து இன்றுவரை உலகலாவிய முஸ்லிம்களுக்கு மத்தியில் கடுமையான கருத்து மோதல்கள் நடந்து வந்தாலும் "கர்பலா நிகழ்வை ஒரு அரசியல் நிகழ்வாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்" என்பது நமது நிலைப்பாடாகும். 

நபி(ஸல்) அவர்களின் பேரப்பிள்ளையான ஹுஸைன் (ரலி) அவர்களின் மரணம் (கொலை) யஸீத் பின் முஆவியா (July 23, 645  - 683) என்பவரால் நடத்தப்படுகின்றது.   யஸீத் பின் முஆவியா தனி மனிதராக நின்று இந்த காரியத்தில் ஈடுபடவில்லை.  அந்ந சம்பவம் நடக்கும் போது சம்பவம் நடந்த கர்பலா பகுதியில் யஸீத் பின் முஆவியா என்பவரே ஆளுனராக இருந்தார்.  அவருடைய ஆளுமைப் பகுதிகளுக்கு எதிராகவும் அவரது அதிகாரத்துக்கு எதிராகவும் நடந்தேறிய குழப்பங்களிலேயே ஹுஸைன் (ரலி) அவர்கள் கொல்லப்படுகிறார்கள்.   (முஹர்ரம் மாதம் 10 நாள் இந்த சம்பவம் நடக்கின்றது)

ஒரு அரசியல் நிகழ்வாக நடந்து முடிந்த இந்த சம்பவத்திற்கு ஷியாக்கள் வேறு வடிவம் கொடுத்து வளர்த்து விட்டார்கள். இன்றுவரை அந்த அரசியல் நிகழ்வை இஸ்லாமிய நிகழ்வாகவே காட்டி வருகிறார்கள். 

இஸ்லாமிய வரலாற்றில் உலக முஸ்லிம்களின் இரண்டாம் தலைவராக ஆட்சிப்புரிந்து வந்த உமர்(ரலி) அவர்கள் ஒரு மடையனால் (அவன் முஸ்லிம் அல்ல)  கொலை செய்யப்பட்டபோது உமர்(ரலி) அவர்களின் இடத்தை நிரப்ப (அதாவது முஸ்லிம் உம்மத்திற்கு தலைமை பொறுப்பேற்க) அலி(ரலி) அவர்களே அன்றைய ஆலோசனைக் குழுவினரால் முன்மொழியப்பட்டார்கள்.  அலி (ரலி) அந்த பொறுப்பை ஏற்க மறுத்தவுடன் பொறுப்பு உஸ்மான்(ரலி) அவர்களிடம் செல்கின்றது.  (இந்த சம்பவம் புகாரியில் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது)  அந்த சம்பவத்தின் முக்கிய இடத்தை மட்டும் இங்கு பார்ப்போம்.

பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3699

அவர்களை அடக்கம் செய்து முடித்தபோது அந்த (ஆறு பேர் கொண்ட) ஆலோசனைக் குழுவினர் (அடுத்த ஆட்சித் தலைவர் யார் என்று தீர்மானிப்பதற்காக ஓரிடத்தில்) குழுமினர். அப்போது, அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள், '(கருத்து வேறுபாட்டைக் குறைப்பதற்காக, ஆட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கும்) உங்களின் உரிமையை உங்களில் மூன்று பேர்களிடம் ஒப்படையுங்கள்' என்று கூறினார்ள். அப்போது ஸுபைர்(ரலி), 'என்னுடைய அதிகாரத்தை அலி அவர்களுக்கு (உரியதாக) நான் ஆக்கிவிட்டேன்' என்று கூறினார்கள். பிறகு தல்ஹா(ரலி), 'என்னுடைய அதிகாரத்தை நான் உஸ்மான் அவர்களுக்கு (உரியதாக) ஆக்கி விட்டேன்' என்று கூறினார்கள். பிறகு ஸஅத்(ரலி), 'என்னுடைய அதிகாரத்தை நான் அப்தூ ரஹ்மான் பின்அ வ்ஃப் அவர்களுக்கு (உரியதாக) ஆக்கிவிட்டேன்' என்று கூறினார்கள். அப்போது அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) (அலீ ரலி- அவர்களையும் உஸ்முhன் - ரலி- அவர்களையும் நோக்கி), 'உங்கள் இருவரில் இந்த அதிகாரத்திலிருந்து விலகிக் கொள்(ள முன்வரு)கிறவரிடம் இந்தப் பொறுப்பை நாம் ஒப்படைப்போம். அல்லாஹ்வும், இஸ்லாமும் அவரின் மீது (கண்காணிப்பாளர்களாக) உள்ளனர். உங்களில் சிறந்தவர் யாரென (அவரவர் மனத்திற்குள்) சிந்தித்துக் கொள்ள வேண்டும்' என்று கூறினார்கள். அப்போது இருமூத்தவர்(களான உஸ்மான்(ரலி) அவர்களும், அலீ(ரலி) அவர்)களும் மெளனமாக இருந்தார்கள். அப்போது, அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி), 'நீங்கள் (ஆட்சியாளரைத் தேர்ந்தெடுக்கும்) அதிகாரத்தை என்னிடம் ஒப்படைக்கிறீர்களா? உங்களில் சிறந்தவரை நான் (தரத்தில்) குறைத்து மதிப்பிடவில்லை யென்பதை அல்லாஹ் கண்காணித்துக் கொண்டேயிருக்கிறான்' என்று கூறினார்கள். அதற்கு, அவ்விருவரும் 'ஆம்! (உங்களிடம் அப்பொறுப்பை ஒப்படைக்கிறோம்)' என்றனர். அப்போது அவ்விருவரில் ஒருவரின் ( - அலீ - ரலி அவர்களின்) கையை அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) பிடித்துக் கொண்டு 'உங்களுக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் (நெருங்கிய) உறவுமுறை இருக்கிறது. மேலும், இஸ்லாத்தில் உங்களுக்கு நீங்களே அறிந்துள்ள சிறப்பும் உண்டு. அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டேயிருக்கிறான். உங்களை நான் ஆட்சித் தலைவராக நியமனம் செய்தால் (குடிமக்களிடத்தில்) நீங்கள் நீதியுடன் நடந்து கொள்வீர்கள். உஸ்மான் அவர்களை நான் ஆட்சித் தலைவராக நியமனம் செய்தால் அவருக்கு செவிமடுத்து, கட்டுப்பட்டு நடப்பீர்கள்' என்று கூறினார்கள். பிறகு இன்னொருவரிடம் ( உஸ்மான் - ரலி - அவர்களிடம்) தனியே வந்து அலீ(ரலி) அவர்களிடம் கூறியதைப் போன்றே (அவர்களிடமும்) வாக்குறுதி வாங்கிய பின், 'உஸ்மான் அவர்களே! தங்களின் கையைத் தாருங்கள்' என்று கூறி (உஸ்மான் - ரலி - அவர்களின் கையைப் பிடித்து) அவர்களுக்கு பைஅத் (விசுவாசப் பிரமாணம்) செய்து கொடுத்தார்கள். அப்போது அலீ(ரலி) அவர்களும் உஸ்மான்(ரலி) அவர்களுக்கு விசுவாசப் பிரமாணம் செய்தார்கள். மேலும், அந்நாட்டவரும் (மதீனா வாசிகளும்) வந்து அவர்களிடம் பைஅத் செய்து கொடுத்தார்கள்.

முதலில் ஆட்சிப் பொறுப்பு அலி (ரலி) அவர்களிடமே கோரப்படுகின்றது.  பிறகே உஸ்மான் (ரலி) அவர்களிடம் செல்கின்றது.  ஆட்சிப் பொறுப்பை முன் மொழிந்த அப்துர்ரஹ்மான் பின் அவ்ப் அவர்களையடுத்து தனது முதல் ஒப்புதலை( இன்றைய ஓட்டெடுப்பு முறை) ஜனநாயக முறையில் அலி (ரலி) அவர்களே செலுத்துகிறார்கள்.  ஒட்டுமொத்த முஸ்லிம்களின் வாக்கெடுப்பிலும் கருத்து வேறுபாடின்றி உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சி அமைகின்றது.   உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் அவர்களின் ஆட்சிக்கு எதிரான கருத்தோட்டங்கள் துவங்கி வலுபெற்று கடைசியில் உஸ்மான்(ரலி) அவர்களின் கொலையில் அது முடிகின்றது.  அவர்களின் இடத்தை அலி(ரலி) நிரப்புகிறார்கள்.  

ஒரு ஜனாதிபதியின் கொலை, அதை தொடர்ந்து புதிய ஜனாதிபதியின் பதவிஏற்பு என்று சூழ்நிலையின் கடினம் மக்களை பலவிதமாக சிந்திக்க வைத்து அவை முஸ்லிம் உம்மத்தின் பிரிவினையாக உருவெடுக்க வைத்து விட்டது.  அதன் தொடர்ச்சியாக நடந்ததே கர்பலாவாகும்.   வரலாற்று சம்பவங்களை ஊன்றி படிப்பவர்களுக்கு, அந்த வரலாறு குறித்து சிந்திப்பவர்களுக்கு "கர்பலா என்பது ஒரு அரசியல் நிகழ்வு" என்பது தெளிவாக விளங்கும்.

அதை ஒரு அரசியல் நிகழ்வாகவே சில முக்கிய நபித்தோழர்களும் பார்த்தார்கள். அதனால் தான் யஸீத் பின் முஆவியாவின் ஆளுமைக்கு எதிரான கிளர்ச்சி துவங்குவதை அவர்களால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. ஆட்சியாளராக இருந்த யஜீதையே அவர்கள் ஆதரித்தார்கள்.  இதற்கான சான்றை பார்த்து விட்டு தொடர்வோம்.

பாகம் 7, அத்தியாயம் 92, எண் 7111

 நாபிஉ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

மதீனாவாசிகள் யஸீத் இப்னு முஆவியாவுக்க அளித்த விசுவாசப் பிரமாணத்தை விலக்கிக் கொண்டபோது, இப்னு உமர்(ரலி) அவர்கள் தம் அபிமானிகளையும் தம் மக்களையும் ஒன்று திரட்டி, 'மோசடி (நம்பிக்கைத் துரோகம்) செய்பவன் ஒவ்வொருவருக்கும் (உலகில்) அவன் செய்த மோசடியை வெளிச்சமிட்டு காட்டுவதற்காக வெளிச்சமிட்டுக் காட்டுவதற்காக மறுமைநாளில் கொடியொன்று நடப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டுள்ளேன். அல்லாஹ் மற்றும் அவரின் தூதர் வழிமுறைப்படி நாம் மனிதருக்கு (யஸீதுக்கு) விசுவாசப் பிராமணம் செய்துகொடுத்துள்ளோம். அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் வழிமுறைப்படி ஒரு மனிதருக்கு விசுவாசப்பிரமாணம் செய்துகொடுத்துள்ளோம். அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் வழிமுறைப்படி ஒரு மனிதருக்கு விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்துவிட்டுப் பிறகு அவருக்கே எதிராகப் போரிடுவதை விடப் பெரிய மோசடி எதையும் நான் அறியவில்லை. (என் சகாக்களான) உங்களில் எவரும் யஸீதுக்கு செய்து கொடுத்த விசுவாசப் பிராமணத்தை விலக்கிக் கொண்டதாகவோ, இந்த ஆட்சியதிகாரத்தில் வேறெவருக்காவது விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்ததாகவோ நான் அறிந்தால், அதுவே அவருக்கும் எனக்கும் இடையே உள்ள உறவை துண்டிக்கக் கூடியதாக இருக்கும்' என்றார்கள்.

யஜீதின் செயல்பாடுகளில் அதிருப்தியடைந்தவர்கள் அவரது ஆட்சிக்கு கொடுத்த வாக்குறுதியை மீறி நடக்கத் துவங்கிய போது மிக சிறந்த நபித்தோழரான இப்னு உமர் (ரலி) அவர்கள் அதை மிக வன்மையாக கண்டித்துள்ளார்கள் என்பதும், யஸீதின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்வது நயவஞ்சகத்தனத்தின் அடையாளம் என்று கூறி அதற்கு சான்றாக நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கையை சமர்பித்ததுத் இங்கு ஊன்றி கவனிக்கத்தக்கதாகும்.    

ஒரு ஆட்சியாளரின் ஆட்சிக்கு கீழ் மக்கள் ஒன்றுபட்டிருக்கும் போது அங்கு வேறு ஆட்சியாளரை கொண்டு வர முயற்சிப்பது, உள்நாட்டுக் குழப்பத்தை ஏற்படுத்துவது போன்றவை இறையாண்மைக்கு எதிரானது என்று இஸ்லாம் சொல்கின்றது.

سمعت رسول الله ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏يقول ‏ ‏من أتاكم وأمركم جميع على رجل واحد يريد أن ‏ ‏يشق عصاكم ‏ ‏أو يفرق جماعتكم فاقتلو
நீங்கள் ஒரு அமீருக்கு (அதிகாரம் உள்ளவருக்கு) கீழ் ஒருங்கிணைந்து கட்டுப்பட்டிருக்கும் போது அதில் குழப்பம் ஏற்படுத்த முனைபவர்களை - பிரிவினையை உருவாக்குபவர்களைக் கொல்லுங்கள் என்றும் பிறிதொரு அமீராக தன்னை அறிவிப்பவர்களில் பிந்தியவரை கொல்லுங்கள் என்றும் நபி(ஸல்) குறிப்பிட்டுள்ளார்கள்.

இஸ்லாமிய ஆட்சிக்கு எதிராக குழப்பம் விளைவிப்பவர்கள் முஸ்லிமா அல்லது பிறரா என்று பார்க்கப்படமாட்டார்கள். ஆட்சியாளர்கள் அவர்களை குழப்பக்காரர்களாகவே பார்ப்பார்கள்.   அத்தகைய குழப்பம் விளைவதை இப்னு உமர் (ரலி) அவர்கள் வன்மையாகக் கண்டிக்கிறார்கள்.  இப்னு உமர் (ரலி) அவர்கள் யஜீத் பின் முஆவியாவை யஜீத் என்ற தனிமனிதனாகப் பார்க்கவில்லை. அவர் ஒரு ஆட்சித்தலைவர் என்றே பார்க்கிறார்கள்.  நமது நிலைப்பாடும் அதுதான்.

ஷியாக்களால் வன்மையாக்கப்பட்டுள்ள வரலாற்றுப் பக்கங்களை கருத்தில் கொள்பவர்கள்தான் கர்பலாவை உலகலாவிய துக்க இடமாகவும், துக்க தினமாகவும் பார்ப்பார்கள் என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

அரஃபா - ஏன் முரண்பாடு

ஊருக்கொரு அரஃபாதினமா..? ஆதாரங்கள் என்ன சொல்கின்றது?

ஹஜ் நெருங்கி விட்டதைத் தொடர்ந்து அரஃபா நோன்புப பற்றிய சிந்தனையும் அதைத் தொடர்ந்து எந்த நாளில் நோன்பு நோற்பது என்ற சலசலப்பும் நம்மிடையே தோன்றும்.

அவரவருக்கு துல்ஹஜ் பிறை 9 எதுவோ அன்றைக்கு நோன்பிருப்பதுதான் சுன்னத் என்று ஒரு சாராரும், ஹாஜிகள் அரபாவில் இருக்கும் அன்றைக்கு தான் நோன்பிருக்க வேண்டும் என்று மற்றொரு சாராரும் தங்கள் கருத்தை முன் வைக்கின்றார்கள்.

இரண்டு சாராரின் கருத்துக்களில் முதல் சாரார் எடுத்து வைக்கும் அந்தந்தப் பகுதியின் பிறை அடிப்படையில் 9 அன்றைக்கு நோன்பு வைப்பதே அரபாவாகும் என்ற வாதம் ஆதாரங்களுக்கு முரணாகவே தென்படுகின்றது.

இந்த சாரார் எடுத்து வைக்கும் வாதம் நபி(ஸல்) துல் ஹஜ் பிறை 9 அன்று நோன்பு வைப்பார்கள் என்பதேயாகும்.

நபி(ஸல்) அவர்கள் துல்ஹஜ் ஒன்பதாம் நாள் நோன்பு வைப்பார்கள் என நபி(ஸல்) அவர்களின் மனைவிகளில் சிலரிடமிருந்து ஹுனைதாபின் காலித்(ரலி), அறிவிக்கிறார்கள். நஸயி, அஹ்மத்.

துல்ஹஜ் 9 என்று குறிப்பிடுவதால் அவரவரும் துல்ஹஜ் பிறை 9 அன்று நோன்பிருப்பதுதான் சுன்னத் என்று இவர்கள் முடிவு செய்கிறார்கள்.

இது பிறையை தேர்ந்தெடுப்பதில் - பிறையை அடிப்படையாகக் கொண்டதில் உள்ள பிரச்சனையாக அவர்கள் பார்க்கிறார்கள்.

மற்ற அறிவிப்புகள் ஏதும் இன்றி பிறையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இந்த நோன்பு சுன்னத்தாக்கப்பட்டிருந்தால் இவர்களின் வாதம் அவர்கள் தரப்பில் ஓரளவு நியாயமாக இருக்கலாம். ஆனால் இது பிறையோடு சேர்த்து மற்ற ஒரு நிகழ்வையும் அடிப்படையாகக் கொண்டதாகும்.

அரஃபா நோன்பு என்பது அரஃபா தினத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். அரஃபா என்பது ஹஜ் செய்ய செல்லும் ஹாஜிகள் அரஃபா எனும் பெருவெளியில் தங்கும் நாளைக் குறிக்கும்.

இந்த நாளின் நோன்பைப் பற்றி நபி(ஸல்) குறிப்பிடும் 'அரஃபா தின நோன்பு' என்றே குறிப்பிட்டுள்ளார்கள்.

அரஃபா தினத்தில் நோன்பு வைப்பது அதற்கு முந்தைய ஒரு வருட, பிந்தி வரும் ஒரு வருட (சிறிய) பாவங்களுக்கு பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் நம்பிக்கைக் கொள்கிறேன் என்று நபி(ஸல்) குறிப்பிட்டுள்ளார்கள். (அபூகதாதா(ரலி) திர்மிதி) இதே செய்தி இப்னுமாஜாவிலும் இடம் பெறுகின்றது.

அரஃபா தினத்தின் நோன்பு முந்தைய - பிந்தைய ஆகிய இரண்டு வருட (சிறிய) பாவங்களுக்கு பரிகாரமாகவும் ஆஷுரா தின நோன்பு ஒரு வருட பாவத்திற்கு பரிகாரமாகவும் அமையும் என்றும் நபி(ஸல்) குறிப்பிட்டுள்ளார்கள். (அபூகதாதா (ரலி) அஹ்மத்)  இந்த செய்தி முஸ்லிமிலும் இடம் பெறுகின்றது.

صيام يوم ‏ ‏عرفة ‏ ‏أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده

அரஃபாதின நோன்பு என்று நபி(ஸல்) குறிப்பிட்டுள்ளதால் அரஃபா தினம் எதுவென்று அறிந்து நோன்பு வைப்பதே சுன்னத்தாகும்.

அரஃபா இடமும் - தினமும்.

நாங்கள் அஃபாவில் மிக தொலைவான இடத்தில் தங்கி இருந்தோம். அப்போது இப்னு மிர்பஃ(ரலி) எங்களிடம் வந்தார்கள். 'நான் நபியவர்களின் தூதராக உங்களிடம் வந்துள்ளேன். நீங்கள் இருக்கும் இடத்திலேயே இருங்கள். இதை நீங்கள் இப்ராஹீம்(அலை) அவர்களிலிருந்து வழிவழியாக அடைந்திருக்கிறீர்கள்' என்று நபி(ஸல்) கூறினார்கள். (பல நபித்தோழர்கள் அறிவிக்கும் இச்செய்தி திர்மிதி, நஸயி, இப்னுமாஜா போன்ற நூல்களில் வருகின்றது.

நபி(ஸல்) அரஃபாவில் தங்கினார்கள். இதுதான் அரஃபா, அரஃபா முழுவதும் தங்குவதற்கான இடமாகும் என்று குறிப்பிட்டார்கள்.

அரஃபாவில் என்றைக்கு மக்கள் கூடுகிறார்களோ அதுவே அரஃபாதினமாகும். இது வருடத்தில் ஒரு நாள் மட்டுமே நிகழும் நிகழ்வாகும். அந்த ஒரு நாளைக்கு பிறகு அந்த வருடத்தில் அரஃபாதினம் என்று எதுவும் கிடையாது. அரஃபா தின நோன்பு என்று தெளிவாக இறைத்தூதர் குறிப்பிட்டுள்ளதால் அன்றைய தினம் (அரஃபாவில் மக்கள் கூடும் அந்த நாளில்) நோன்பு நோற்பதுதான் சுன்னத்தாகும்.

அந்த நாளில் அரஃபா பெருவெளியில் இருப்பவர்கள் நோன்பிருக்கக் கூடாது. நபி(ஸல்) அரஃபாவில் இருக்கும் போது நோன்பை விட்டு விட்டார்கள் என்று பல நபித்தோழர்கள் அறிவிக்கின்றனர்.

என்றைக்கு அரஃபாவில் இருப்பவர்கள் நோன்பு நோற்கவில்லையோ அன்றைக்கு அரஃபாவிற்கு வெளியில் இருப்பவர்கள் நோன்பிருப்பது சுன்னத்தாகும். இது துல்ஹஜ் பிறை 9 அன்று நிகழ்வதாகும். இதையே நபி(ஸல்) துல்ஹஜ் பிறை 9 அன்று நோன்பு வைப்பார்கள் என்று அவர்களின் துணைவியர் அறிவிக்கிறார்கள். இதுவே முரண்பாடற்ற முடிவாகும்.

அரஃபா மைதானத்தில் மக்கள் கூடுவதையும், அவர்கள் நோன்பில்லாமல் இருப்பதையும் உலக மக்கள் அறியும் நிலையில் இன்றைக்கு எங்கள் பகுதிக்கு அரஃபா இல்லை என்று ஒரு சாரார் கூறுவதும், இன்றைக்கு நோன்பு வைப்பது சுன்னத்தல்ல என்று அறிவிப்பதும் பொருத்தமானதுதானா... என்பதை மக்கள் சிந்திக்கட்டும்.

அரஃபா மைதானத்திலிருந்து மக்களெல்லாம் புறப்பட்டு முஸ்தலிபா சென்றபிறகு இதுதான் அரஃபா நாள் (சில பகுதிகளில் இரண்டு நாட்கள் கழித்து இதுதான் அரஃபாநாள் என்று அறிவிப்பு) என்று சொல்லுவது எந்த அளவு நியாயமான வாதம் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஹஜ் பயணமும், பிறையும்.

இஸ்லாத்தில் பல வணக்கங்களுக்கு பிறை முக்கிய அடையாளமாக இருக்கின்றது. அவற்றில் ஒன்று ஹஜ்ஜாகும்.

ஹஜ்ஜுடைய நாட்களை அறிவிப்பதில் முக்கிய முதலிடத்தில இருப்பது பிறையாகும்.

(நபியே) பிறைகளைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றார்கள். அது மக்களுக்கு நாட்களையும், நேரத்தையும் காட்டி, ஹஜ்ஜையும் அறிவிக்கின்றது என்று கூறும். (அல்குர்ஆன் 2:189)

பிறை பிறந்து ஹஜ்ஜு அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில் தனது பகுதிப் பிறையை ஒருவர் ஹஜ்ஜுப் பிறையாக கணக்கெடுத்தால் அவரால் ஹஜ் செய்ய முடியுமா...?

ஹஜ் என்பதே அரபா தான். யாரேனும் முஸ்தலிபாவில் தங்கும் (பத்தாம் - பெருநாள்) இரவின் பஜ்ருக்கு முன்பாக அரபாவை அடைந்து விட்டால் அவர் ஹஜ்ஜைப் பெற்றுக் கொள்கிறார் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். (உர்வாபின் முளர்ரிஸ் (ரலி) திர்மிதி அபூதாவூத், நஸயி, இப்னுமாஜா)

ஹஜ் என்பது முழுக்க முழுக்க அரபாவை (அரஃபா இடத்தை அடைவதை) சார்ந்தது என்று இந்த செய்தி மீண்டும் அறிவிக்கின்றது.

அந்தந்தப் பகுதி பிறை அடிப்படையில் அரஃபாவை தீர்மானிக்கலாம் என்று முடிவு செய்பவர்களில் ஒருவர் அரஃபா தினத்தில் ஹஜ்ஜுக்கு சென்றால் ஹஜ் கூடிவிடும் என்ற அடிப்படையில் அவருடைய அரஃபா நாளில் அரஃபா செல்கிறார் (உதாரணமாக ஒருநாளோ, இரு நாளோ கழித்து பிறையைப் பார்த்து ஹஜ்ஜை தீர்மானிக்கும் ஒரு இந்தியர்) என்றால் அவரால் அரஃபாவை அடைய முடியுமா...? அவர் செல்லும் நாளில் அரஃபா வெறிச்சோடி கிடக்கும். அவரது ஹஜ் கனவும் வீணாகி போகும்.

மக்கள் ஒன்று திரண்டு நிற்கும் அரஃபா நாளில் அங்கு அவர்களுடன் சேர்ந்துக் கொள்ளாத எவருக்கும் ஹஜ் கிடைக்க வாய்ப்பில்லை என்ற தெளிவான நிலையில், ஹஜ் கிடைக்க வேண்டும் என்றால் தங்கள் பகுதியில் பிறைப் பார்க்க வேண்டும் என்ற முரணான போக்கை விட்டொழித்து குர்ஆனின் கட்டளைப்படி பிறை ஹஜ்ஜை அறிவித்து விட்டவுடன் அதைப் பின்பற்றியாக வேண்டும். பிறை பிறந்து ஹஜ்ஜை அறிவித்து அதே பிறை அரஃபாத்தையும் அறிவித்து அரஃபாவில் மக்கள் கூடி அவர்கள் நோன்பில்லாத நிலையில் அதே நாளில் பிறர் நோன்பு வைப்பதே அரஃபா நோன்பாகும். அதுவே சுன்னதாகும்.

அவர்கள் அரஃபாவை கடந்து, பெருநாள் தினத்தில் நுழைந்து பெரும் பகுதியினர் பெருநாள் கொண்டாடிக் கொண்டிருக்கும் போது இதுதான் எனக்கு அரஃபா தினம் என்று கூறுபவர்கள் அந்த முடிவை குர்ஆன் சுன்னாவிலிருந்து விளங்கி பெறவில்லை என்பது தெளிவாகின்றது.

மக்கள் அரஃபா தினத்தில் குழுமி இருக்கும் அதே நாளில் நோன்பிருப்போம். சுன்னாவை சுன்னாவாக பின்பற்றுவோம். இறைவன் அருள் புரியட்டும்

ஸல் - அலை உங்களுக்கும் தான்!

ஸலாமுன் அலைக்கும்.

பொதுவாக முஸ்லிம்கள் இஸ்லாமிய கட்டுரைகள் எழுதும் போது இறைத்தூதர்களையோ முஸ்லிம் பெரியார்களையோ குறிப்பிடும் போது பெயருக்கு பக்கத்தில் சுருக்கமாக சில எழுத்துக்களை எழுதுவார்கள். பலருக்கு இது குறித்து சந்தேகம் மற்ற சிலர் விரும்பியவாரு விளக்கங்கள் என்ற நிலையில் இருக்கிறார்கள். எனவே அது குறித்த விளக்கத்தை தமிழ் முஸ்லிம் சமூகத்திற்கு வைக்கிறோம்.

முஹம்மத் என்ற பெயரையோ அல்லது நபி என்பதையோ எழுதும் போது பக்கத்தில் ஸல் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். ஸல் என்பது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்பதன் சுருக்கம். அல்லாஹ் அவருக்கு அருளும் ஈடேற்றமும் அளிப்பானாக என்பது இதன் பொருள்.

பிற நபிமார்களின் பெயர்களை எழுதும் போது அலை என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். அலை என்பது அலைஹிஸ் ஸலாம் அல்லது அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் என்பதன் சுருக்கம் இவருக்கு அருளும் சாந்தியும் ஏற்படட்டுமாக என்பது இதன் பொருள்.

நபித்தோழர்களைப் பற்றி எழுதும் போது ரலி என்று வரும். ரலி என்பது ரலியல்லாஹு அன்ஹு (ஆண்பால்) அல்லது ரலியல்லாஹு அன்ஹா (பெண்பால்) என்பதன் சுருக்கம். இவரை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக என்பது இதன் பொருள்.

ரஹ் என்பது ரஹ்மத்துல்லாஹி அலைஹி என்பதன் சுருக்கம். அல்லாஹ்வின் அருள் இவருக்கு ஏற்படட்டுமாக என்பது இதன் பொருள்.
சுருக்கமாக இப்படி எழுதுவது சரியல்ல என்றாலும் எழுதுபவர்கள் அதே பழக்கத்திற்கு ஆட்பட்டு விட்டார்கள். ஆனாலும் ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும்

எழுதும் போது சுருக்கத்திற்காக இப்படி எழுதினாலும் வாசிக்கும் போது முழுமையாக வாசிக்க வேண்டும்.

குறிப்பிட்ட இந்த நான்கு வகையான சொற்களையும் குறிப்பிட்ட சிலருக்குதான் பயன்படுத்த வேண்டும் என்ற எந்த சட்டமும் இல்லை. பொதுவாக அனைத்து முஸ்லிம்களுக்கும் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தலாம்.

(ஸல்)

இறைத்தூதர் முஹம்மத் அவர்களுக்கு ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது மாதிரியே இதர நபிமார்களுக்கும் இதர முஸ்லிம்களுக்கும் கூட இந்த வார்த்தையைப் பயன்படுத்தலாம். வார்த்தைகளின் அர்த்தத்தைப் பார்த்தாலே இது புரியும் என்றாலும் பிறர் தப்புப்பிரச்சாரம் செய்யக் கூடாது என்பதால் கூடுதலாக விளக்குவோம்.

ஸலவாத் எனும் அருளை இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்காக கேட்க வேண்டும் என்று 33:56 வசனம் கூறுகின்றது.

إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا

அல்லாஹ் இந்த நபிக்கு அருள் புரிகிறான். வானவர்கள் அவருக்காக அவனது அருளை வேண்டுகின்றனர். நம்பிக்கை கொண்டோரே! நீங்களும் அவருக்காக (இறை) அருளை வேண்டுங்கள்! ஸலாமும் கூறுங்கள் (அல்குர்ஆன் 33:56)

இந்த வசனம் பற்றி பஷீர் இப்னு ஸஃது (ரலி) இறைத்தூதரிடம் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! இறைவன் உங்களுக்காக ஸலவாத் சொல்லுமாறு கூறுகின்றானே நாங்கள் எவ்வாறு ஸலவாத் கூறுவது என்று கேட்டார்கள் அதற்கு அல்லாஹ்வின் தூதர் 'அல்லாஹும்ம ஸல்லி..... என்ற ஸலவாத்தைக் கற்றுக் கொடுத்த விட்டு உங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டது போன்று ஸலாம் கூறுங்கள் என்றார்கள். (அபூ மஸ்வூத் (ரலி) முஸ்லிம்)

நபிக்காக ஸலவாத் கூற வேண்டும் என்று இறைவன் கூறினாலும் நபி(ஸல்) கற்றுக் கொடுத்த ஸலவாத் தொழகையின் இருப்பிற்குரிய ஸலவாத் என்றே நபித்தோழர்கள் எடுத்துக் கொண்டார்கள். ஏனெனில் நபி(ஸல்) தொழுகை இருப்பில் ஓதுமாறு இதைக் கற்றுக் கொடுத்ததாகவும் அறிவிப்புகள் உள்ளன.

உங்களில் ஒருவர் தொழுதால் இறைவனை மகிமைப்படுத்தி போற்றி புகழ்ந்து பின்னர் நபிக்காக ஸலவாத் கூறி பின்னர் தன் தேவைகளைக் கேட்கட்டும் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். (ஃபளாலா இப்னு உபைத்(ரலி) நஸயி திர்மிதி)

என்னைப் பற்றி நினைவுக் கூறும்போது ஸலவாத் கூறுங்கள். ஸலவாத் கூறாதவன் கஞ்சன் என்றெல்லாம் அறிவிப்புகள் வருகின்றன (இப்னுமாஜா)

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு நபித்தோழர்கள் நபியவர்களைப் பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்பதை சேர்த்தே பயன்படுத்தி வந்தார்கள்.

எனவே நபியைப் பற்றிக் குறிப்பிடும் போது இறையருளைப் பெற்றுக் கொடுக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தலாம் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் என்ற வார்த்தையும் பொருத்தமானதுதான் என்றாலும் காலாகாலமாக ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்ற வார்த்தை நிலைப் பெற்று விட்டது.

நபிக்காக ஸலவாத் கூறுவது இறைவன் இட்ட கட்டளை என்பதால் முஸ்லிம்கள் மீது அது கடமையாகும். ஆனாலும் இந்த விஷயத்தில் முஸ்லிம்கள் அலட்சியமாக இருந்து விடுகிறார்கள். இறைவன் நபிக்காக அருள் புரிகிறான். வானவர்கள் அருளை வேண்டுகிறார்கள். இறைநம்பிக்கையார்களே நீங்களும் இந்த தூதருக்கு ஸலாம் சொல்லி அவருக்காக ஸலவாத் கூறுங்கள் என்ற வசனம் ஜும்ஆ மேடைகளில் தவறாமல் நினைவுக் கூறப்படும். அந்த வசனத்தின் அர்த்தம் புரியாதவர்களும் அர்த்தம் புரிந்தவர்களும் கூட அதை பெரிதாக எடுத்துக் கொள்வதாகத் தெரியவில்லை. இறைவனே நேரடியாக இந்தக் கட்டளையை இடுவதால் நாம் அலட்சியமாக இருக்கக் கூடாது.

(அலை)

இதர நபிமார்கள் அனைவரையும் குறிப்பிடும் போது அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் என்று கூறும் மரபு நீண்ட நெடுங்காலமாக நீடித்து வருகின்றது. முஹம்மத் (ஸல்) அவர்களைத் தவிர்த்து பிற நபிமார்களுக்கு எந்த அடைமொழியும் (வாழ்த்தும்) சேர்ந்து வர வேண்டும் என்ற எந்தக் கட்டளையும் குர்ஆனில் இல்லை.

இறை நம்பிக்கையாளர்களே இந்த நபிக்காக பிரார்த்தித்து ஸலாமும் கூறுங்கள் என்ற இறைக் கட்டளையை நாம் அறிந்தோம். இதர நபிமார்களுக்கு இத்தகைய கட்டளையை இறைவன் இடவில்லை. இதர நபிமார்களைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது அந்தந்த நபிமார்களின் பெயர்களை மட்டும் தான் குறிப்பிட்டுள்ளார்களேத் தவிர அவர்களின் பெயர்களோடு அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் என்ற அடைமொழியை குறிப்பிட்டதில்லை.

நல்லப் பண்பின் அடையாளமாக இத்தகைய அடைமொழிகள் இந்த உம்மத்தில் நீடித்து நிற்கின்றது.

ஆனாலும் இந்த அடைமொழிகளை நபிமார்களுக்கு மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்ற விதியும் இல்லை. இறை நம்பிக்கையாளர்கள் அனைவருக்கும் இத்தகைய அடைமொழியை பயன்படுத்தினாலும் அதை தவறென்று சொல்லி தடுக்கும் எந்த ஆதாரமும் இல்லை.

அனுமதிக்கும் ஆதாரத்தைப் பார்ப்போம்.

هُوَ الَّذِي يُصَلِّي عَلَيْكُمْ وَمَلَائِكَتُهُ لِيُخْرِجَكُم مِّنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ وَكَانَ بِالْمُؤْمِنِينَ رَحِيمً
ا
(இறை நம்பிக்கையாளர்களே) இறைவன் உங்களுக்காக (ஸலவாத்) அருள்புரிகிறான். அவனுடைய வானவர்களும் (உங்களுக்காக) பிரார்த்திக்கிறார்கள் (அல்குர்ஆன் 33:43)

நபி(ஸல்) அவர்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ள அதே வார்த்தைகள் இங்கும் பிற முஃமின்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இறை நம்பிக்கையாளர்களுக்கு இறைவன் அருள் புரிகிறான் வானவர்களும் அருளை வேண்டுகிறார்கள் என்று.

ஸல்லல்லாஹு அலைஹி என்றால் அல்லாஹ் அவருக்கு ஸலவாத் அருள் புரிகிறான் என்பது பொருள். அனைவருக்குமே அல்லாஹ்வின் ஸலவாத் உண்டு என்பதால் ஸல்லல்லாஹு அலைஹி என்பதை அனைவருக்குமே பயன்படுத்தலாம். வஸல்லம் (அல்லாஹ் அவருக்கு (சாந்தி) வழங்கட்டும்) என்பதையும் அனைவருக்கும் பயன்படுத்தலாம். அல்லாஹ்வின் ஸலாம் அனைவருக்கும் இருப்பதாலேயே ஒருவருக்கொருவர் ஸலாம் கூறுகிறோம். கூறவேண்டுமெனறு முஹம்மத் (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அல்லாஹ் அவருக்கு ஸலவாத்தும், ஸலாமும் வழங்கட்டும்'' என்பது ஸல்... என்பதன் பொருள். இவருக்கு ஸலவாத்தும் ஸலாமும் ஏற்படட்டும் என்பது அலை என்பதன் பொருள். அல்லாஹ் என்பது இங்கே கூறப்படவில்லை என்பதைத் தவிர இரண்டும் ஒரே கருத்தைக் கூறும் இரண்டு வார்த்தைகள் தாம்.

இதிலிருந்து பிரார்த்திக்கும் எண்ணத்தில் பிற நம்பிக்கையாளர்களுக்கு இத்தகைய அடைமொழியை இட்டால் அதை தடுக்க முடியாது.

ஆனாலும் ஒரு விஷயத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்

நபிமார்களுக்கென்று அடைமொழியாகி விட்ட ஒரு வார்த்தையை பிறருக்கு பயன்படுத்தும் போது போலி நபி போன்ற குழப்ப நிலையும் வீண்மனக் கஷ்டங்களும் தோன்றும். சர்ச்சைகளும் அவதூறுகளும் கிளம்பும் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

(ரலி)

நபித்தோழர்களைக் குறிப்பிடும் போதெல்லாம் ரலியல்லாஹு அன்ஹு என்பதை நாம் பயன்படுத்துகிறோம். இதற்கு காரணம் இறைவனின் இந்த வசனங்கள் தான்.

وَالسَّابِقُونَ الأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالأَنصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُم بِإِحْسَانٍ رَّضِيَ اللّهُ عَنْهُمْ وَرَضُواْ عَنْهُ وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ

ஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விஷயத்தில் அவர்களைப் பின்தொடர்ந்தவர்களையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். (அல்குர்ஆன் 9:100)

لَقَدْ رَضِيَ اللَّهُ عَنِ الْمُؤْمِنِينَ إِذْ يُبَايِعُونَكَ تَحْتَ الشَّجَرَةِ فَعَلِمَ مَا فِي قُلُوبِهِمْ فَأَنزَلَ السَّكِينَةَ عَلَيْهِمْ وَأَثَابَهُمْ فَتْحًا قَرِيبًا

அந்த மரத்தினடியில் உம்மிடம் உறுதி மொழி எடுத்த போது நம்பிக்கையாளர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். (அல் குர்ஆன் 48:18)

முதல் வசனத்தில் ரளியல்லாஹு அன்ஹும் (அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான்) ரளு அன்ஹு (அவனை அவர்கள் பொருந்திக் கொண்டார்கள்)

இரண்டாவது வசனத்தில் ரளியல்லாஹு அனில் முஃமினீன் (முஃமின்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான்) என்று கூறப்பட்டுள்ளது. முஃமின்கள் என்று இங்கு (இந்த இடத்தில்) கூறப்பட்டுள்ளது நபித்தோழர்களைத் தான் ஏனெனில் அவர்கள் தான் நபியுடன் மரத்தடியில் இருந்தவர்கள்.

சரி, நபித்தோழர்களல்லாத பிறருக்கு இந்த வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாதா.. அடுத்து வரும் வசனங்களைப் பார்ப்போம்.

لَا تَجِدُ قَوْمًا يُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ يُوَادُّونَ مَنْ حَادَّ اللَّهَ وَرَسُولَهُ وَلَوْ كَانُوا آبَاءهُمْ أَوْ أَبْنَاءهُمْ أَوْ إِخْوَانَهُمْ أَوْ عَشِيرَتَهُمْ أُوْلَئِكَ كَتَبَ فِي قُلُوبِهِمُ الْإِيمَانَ وَأَيَّدَهُم بِرُوحٍ مِّنْهُ وَيُدْخِلُهُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ أُوْلَئِكَ حِزْبُ اللَّهِ أَلَا إِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْمُفْلِحُونَ

அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பும் சமூகத்தினர், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பகைத்துக் கொண்டவர்களை நேசிப்பவர்களாக (நபியே!) நீர் காணமாட்டீர். அவர்கள் தங்கள் பெற்றோராயினும் தங்கள் புதல்வர்களாயினும் தங்கள் சகோதரர்களாயினும் தங்கள் குடும்பத்தினராயினும் சரியே, (ஏனெனில்) அத்தகையவர்களின் இதயங்களில், (அல்லாஹ்) ஈமானை எழுதி(ப் பதித்து) விட்டான், மேலும் அவன் தன்னிடமிருந்து (அருள் என்னும்) ஆன்மாவைக் கொண்டு பலப்டுத்தியிருக்கிறான். சுவர்க்கச் சோலைகளில் என்றென்றும் இருக்கும்படி அவர்களைப் பிரவேசிக்கச் செய்வான், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான், அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டார்கள். அவர்கள்தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர், அறிந்துகொள்க: நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர்தாம் வெற்றி பெறுவார்கள். (அல்குர்ஆன் 58:22)

قُلْ أَؤُنَبِّئُكُم بِخَيْرٍ مِّن ذَلِكُمْ لِلَّذِينَ اتَّقَوْا عِندَ رَبِّهِمْ جَنَّاتٌ تَجْرِي مِن تَحْتِهَا الأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَأَزْوَاجٌ مُّطَهَّرَةٌ وَرِضْوَانٌ مِّنَ اللّهِ وَاللّهُ بَصِيرٌ بِالْعِبَادِ

நபியே!) நீர் கூறும்; "அவற்றை விட மேலானவை பற்றிய செய்தியை நான் உங்களுக்குச் சொல்லட்டுமா? தக்வா - பயபக்தி - உடையவர்களுக்கு, அவர்களுடைய இறைவனிடத்தில் சுவனபதிகள் உண்டு. அவற்றின் கீழ் நீரோடைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவர்கள் அங்கு என்றென்றும் தங்குவார்கள்; (அங்கு அவர்களுக்குத்) தூய துணைகள் உண்டு. இன்னும் அல்லாஹ்வின் திருப் பொருத்தமும் உண்டு அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்குகிறவனாக இருக்கின்றான்.(அல் குர்ஆன் 3:15)

جَزَاؤُهُمْ عِندَ رَبِّهِمْ جَنَّاتُ عَدْنٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا رَّضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ ذَلِكَ لِمَنْ خَشِيَ رَبَّهُ

அவர்களுடைய நற்கூலி, அவர்களுடைய இறைவனிடத்திலுள்ள அத்னு என்னும் சுவர்க்கச் சோலைகளாகும். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும்; அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்; அல்லாஹ்வும் அவர்களைப் பற்றி, திருப்தி அடைவான், அவர்களும் அவனைப்பற்றி திருப்தி அடைவார்கள்; தன் இறைவனுக்குப் பயப்படுகிறாரே அத்தகையவருக்கே இந்த மேலான நிலை உண்டாகும். (அல்குர்ஆன் 98:8)

மற்ற நல்லடியார்கள் அனைவருக்கும் ரலி என்பதையும் அதிலிருந்து பிறந்த ரில்வான் என்பதையும் இவ்வசனங்களில் இறைவன் பயன்படுத்தியுள்ளான். இதை நபிமார்களுக்கும் நபித்தோழர்களுக்கும், மற்ற முஸ்லிம்களுக்கும் பயன்படுத்தலாம். மார்க்க அடிப்படையில் இதைத் தடுக்க முடியாது. ஆனாலும் நாம் மேற் கூறிய அதே அடிப்படையில் பிறருக்கு ரளி என்பதை பயன்படுத்தும் போது அப்படி ஒரு நபித்தோழர் இருந்தாரோ... என்ற சந்தேகம் வரலாம். இத்தகைய சந்தேகங்களுக்கு இடம் கொடுக்காமல் இருப்பது நல்லது.

ரஹ்மதுல்லாஹி அலைஹி

அல்லாஹ் அவருக்கு ரஹ்மத் செய்யட்டும் என்பது இதன் பொருள். அல்லாஹ்வின் ரஹ்மத்தை யாருக்காகவும் கேட்கலாம். கேட்க வேண்டும். காலம் சென்ற மகான்கள் என்று நம்பப்படுபவர்களுக்குத் தான் இதைப் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை. அல்லாஹ்வின் ரஹ்மத் அனைவருக்கும் பொதுவானதாக என்பதற்கு நூற்றுக்கணக்கான வசனங்கள் சான்றுகளாக உள்ளன. அது ஒரு பிரார்த்தனை என்பதாலும், இதை பயன்படுத்துவதில் எத்தகைய குழப்பமும் ஏற்படவாய்ப்பில்லை என்பதாலும் இதை பயன்படுத்தலாம்

மேற்கொண்டு விளக்கம் தேவைப்படுவோர் எழுதவும்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Powered by Blogger